பொள்ளாச்சி வழக்கு பணத்துக்கு ஆசைப்படும் சில பெண்களை வைத்து எதிர் கட்சிகளால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று தமிழக முதலமைச்சர் பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பொள்ளாச்சி வழக்கு தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கிய மிகப்பெரிய வழக்காகும். கோவை அருகே, பொள்ளாச்சியில் இளம்பெண்களுடன் நட்பாக பழகி, அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து, அவர்களை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் சிலர்.
இதுத் தொடர்பான ஆடியோ கிளிப் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இவ்வழக்கானது சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரித்ததில் அதிமுக தொடர்புடைய சில பிரபலங்கள் சிக்கினர்.
சமீபத்தில் கூட இவ்வழக்கு தொடர்பாக ஹேரேன்பால் (29), ‘பைக்’ பாபு (27), ‘பைக்’ பாபு (27),அருளானந்தம் (34) ஆகிய மூன்று பேர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தனர். இதில் அருளானந்தம் அதிமுகபொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக இருந்தவராவார்.
இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கு பணத்துக்கு ஆசைப்படும் சில பெண்களை வைத்து எதிர் கட்சிகளால் ஜோடிக்கப்பட்டதென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசியதாக நியூஸ் ஜே தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link:https://archive.ph/NX8Pt

Archive Link: https://archive.ph/MCKKq
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல் பொள்ளாச்சி வழக்கு குறித்து எடப்பாடியார் பேசினாரா என்பதை அறிய, வைரலாகும் புகைப்படச் செய்தியை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு செய்ததில் இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்றாகும்.
தி.மு.க., – எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, கடந்த 26ம் தேதி, சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசினார். ஆ.ராசாவின் இப்பேச்சு தமிழகம் முழுதும் பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வர் ஆ.ராசாவின் இப்பேச்சு குறித்து சமீபத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் தனது வருத்தத்தை மிகவும் கலக்கத்துடன் வெளிப்படுத்தி இருந்தார்.
இத்தகவல் புகைப்படச் செய்தியாக நியூஸ் ஜே தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படச் செய்தியே எடிட் செய்யப்பட்டு முதல்வர் பொள்ளாச்சி வழக்கு குறித்துப் பேசியதாக சமூக வலைத்தளப் பக்கங்களில் பரப்பப்படுகின்றது.
வாசகர்கர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும் எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

நியூஸ் ஜே தொலைக்காட்சியும் வைரலாகும் இந்த பொய் செய்தியை மறுத்து, மறுப்பு பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

Conclusion
பொள்ளாச்சி வழக்கு பணத்துக்கு ஆசைப்படும் சில பெண்களை வைத்து எதிர் கட்சிகளால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று தமிழக முதலமைச்சர் பேசியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தியானது, எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News J Tamil:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)