கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்திருப்பதாக புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் நீட் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும், ஒன்றிய அரசின் தரப்பில் இருந்து இதற்கான பதில்கள் எதுவும் பெறப்படவில்லை.
எனினும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நீட் தேர்வு நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான நடவடிக்கைகளை மாநில அரசு முன்னெடுக்கவில்லை என்று ஒரு சாரார் சர்ச்சை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், “நீட் எக்ஸாம் போன்ற ஒரு தேர்வை எழுதியிருந்தால் என்னால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்க முடியாது. என் திறமைதான் என்னை வாழ்க்கையில் வெற்றிபெறா செய்தது. நீட் என்பது திறமைசாலிகளை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது” என்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்திருப்பதாகப் புகைப்படத் தகவல் ஒன்று வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/Verification:
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நீட் தேர்வு குறித்து கருத்துக் கூறியதாகப் பரவும் புகைப்படத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மையான தகவல் குறித்த ஆராய்ந்தோம்.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் மற்றும் கீவேர்ட் முறையில் தேடியபோது குறிப்பிட்ட அப்புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வைரலாவது நமக்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து, இதுகுறித்து சுந்தர் பிச்சையின் சமூக வலைத்தள அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஆராய்ந்தபோது கடந்த 2017க்கு முன்னர் முதலே இது போன்ற எவ்வித தகவலும் நீட் குறித்து பதியப்படவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்து, கூகுள் பிரஸ் கிளப்பிலும் எந்தவித செய்தியும் இடம்பெறவில்லை. சர்வதேச அளவிலும், தமிழக அளவிலும் முக்கிய முன்னணி ஊடகங்கள் எதிலும் இதுகுறித்த செய்தி வெளியாகவில்லை.
மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, கூகுள் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்து உரையாடியுள்ளார். அதுதொடர்பாக பிஐபி வெளியிட்டுள்ள செய்திகளிலும் சுந்தர் பிச்சை, நீட் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்திப் பேசியதாக எவ்வித செய்தியும் இல்லை.
தொடர்ந்து, குறிப்பிட்ட பதிவில் கூறியிருப்பது போன்று மருத்துவத்துறைக்கான நீட் தேர்விற்கும், சுந்தர் பிச்சைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சுந்தர் பிச்சை, நுழைவுத்தேர்வு மூலமாக ஐஐடி கரக்பூரில் மெட்டலார்ஜிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர்.

இதுதொடர்பாக மேலும் ஆராய்ந்தபோது, கடந்த 2017ம் ஆண்டே எடெக்ஸ், குறிப்பிட்ட அந்த புகைப்படச்செய்தி வெறும் வதந்தி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா இணையதளத்தில் சுந்தர் பிச்சையின் தந்தையும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்திலும் இந்த செய்தி வைரலாகிய நிலையில் அதில் குறிப்பிட்டப்பட்டிருந்த Copenhagen University Press மற்றும் The Business Outsider இணையப்பக்கங்களை ஆராய்ந்தபோது அவர்களும் நீட் தொடர்பாக சுந்தர் பிச்சை பேசியதாக எவ்வித தகவலையும் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நீட் தேர்வு குறித்து கருத்துக் கூறியதாகப் பரவும் புகைப்படம் தவறானது;நிரூபணமற்றது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Sundar pichai:https://twitter.com/sundarpichai
Google press:https://www.blog.google/press/
Britannica:https://www.britannica.com/biography/Sundar-Pichai
PIB:https://twitter.com/PIB_India
Copenhagen University press:https://search.ku.dk/?q=Neet+sundar+pichai
Business outsider:https://business-outsider.com/?s=NEET+Sundar+pichai
edex:https://www.edexlive.com/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)