Fact Check
தமிழ் கற்கும் உத்தர பிரதேச மாணவர்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Claim
தமிழ் கற்கும் உத்தர பிரதேச மாணவர்கள்
Fact
வைரலாகும் புகைப்படச்செய்தி தவறானதாகும். குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற வேறொரு செய்தியுடன் தொடர்புடையதாகும்.
தமிழ் கற்கும் உத்தர பிரதேச மாணவர்கள் என்று புகைப்படச்செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் சாணக்யா செய்தி ஊடகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
”தமிழ் படிக்கும் உ.பி மாணவர்கள். உத்தர பிரதேசத்தில் சென்ற ஆண்டு புதிய தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள பள்ளிகளில் தாய்மொழி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக தமிழ், தெலுகு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான அலுவல் மொழிகளும் சேர்ப்பு.” என்று இந்த புகைப்படச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
தமிழ் கற்கும் உத்தர பிரதேச மாணவர்கள் என்று சாணக்யா வெளியிட்டுள்ள செய்தி புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட செய்தியில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த செப்டம்பர் 30, 2023 அன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் “Inspiring teacher holds outdoor class to bring absent students back to school in UP” என்று வெளியாகியிருந்த செய்தியில் அப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

கடந்த 2023ஆம் வருடம், உத்தரபிரதேசம், ஜான்சி மாவட்டம் லாகரா கிராமத்தில் செயல்படும் அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத நிலையில் தன்னுடைய வகுப்பு பிள்ளைகளை கூட்டிச் சென்று நேரிலேயே அவர்கள் வீட்டின் அருகிலேயே பாடம் எடுத்துள்ளார் ஆசிரியர் அமித். பலமுறை அழைத்து அப்பிள்ளைகள் பள்ளிக்கு வராத காரணத்தால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து கல்வி கற்பித்துள்ளார் ஆசிரியர் அமித்.
இதுகுறித்த வீடியோவும் Samachar India UP ஊடகப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் எங்கும் ஆசிரியர் அமித் தமிழ் கற்றுக்கொடுக்கவில்லை.
தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறதா என்பது குறித்து உத்தர பிரதேச ஆரம்பக் கல்வி சிறப்பு செயலாளர் அவ்தேஷ் குமாரைத் தொடர்பு கொண்டு நியூஸ்செக்கர் சார்பில் உத்தர பிரதேச பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறதா என்று கேட்டபோது தற்போது வரை அப்படி ஏதும் நடைமுறையில் இல்லை என்று விளக்கமளித்தார்.
Also Read: உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Conclusion
தமிழ் கற்கும் உத்தர பிரதேச மாணவர்கள் என்று சாணக்யா வெளியிட்டுள்ள செய்தி புகைப்படம் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
News Report From, TNIE, Dated September 30, 2023 YouTube Video From, Samachar India UP, Dated October 04, 2023
Phone Conversation With, Avdhesh Kumar, UP Elementary school Special Secretary, Dated Februry 19, 2025