போதிய நிதி இல்லாததால் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய 7 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. தேர்தலின்போது திமுக பல வாக்குறுதிகளை அளித்தது. இதில் முக்கியமானது மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம். இத்திட்டம் இதுவரை நிறைவேற்றாதது குறித்து எதிர்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் போதிய நிதி இல்லாததால் இத்திட்டமானது ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: கருக்கா வினோத் பாஜக கராத்தே தியாகராஜனின் டிரைவரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதல்வர் ஸ்டாலின் வரவிருக்கும் நகர்ப்புற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருக்கும் திமுக கூட்டணி நிர்வாகிகளுடனும் வேட்பாளர்களுடனும் காணொலி வாயிலாக தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றார்.
அந்த வகையில் நேற்று (13/01/2021) திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசினார். இதில் இதுவரை திமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார். இத்திட்டங்களுடன் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டமும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்திருந்ததை நம்மால் காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கும்போது மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து என்று ஸ்டாலின் அறிவித்ததாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகியது.
இதன்பின் தி.மு.க இணை செய்தித் தொடர்பாளரான பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, அவரும் “ இந்த தகவல் பொய்யானதுதான், முதல்வர் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றே பேசினார்” என்று விளக்கமளித்தார்.
இதனையடுத்து இந்த தவறான தகவல் பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால் இந்த நியூஸ்கார்டை பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
முதல்வர் நேற்று திண்டுக்கல் பரப்புரையில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் கூடிய நிறைவேற்றப்படும் என்று கூறியதை பாலிமர் நியூஸ் நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது. அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


பாலிமர் நியூலின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவர்களும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை உறுதி செய்தனர்.
Also Read: தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்றாரா துரைமுருகன்?
Conclusion
போதிய நிதி இல்லாததால் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானதாகும்.
இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Charles, Polimer News
Constandine Ravindran, Joint Spokes Person, DMK
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)