Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மத்திய பிரதேச ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், லாரி டிரைவரான தனது தந்தையை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்கிறார் என்கிற வாசகத்துடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வதந்திகளையும் பொய்ச்செய்திகளையும் பரப்புவதில் சமூக வலைத்தளங்கள் கோலோச்சி வருகின்றன. அந்த வகையில் போலிப் பரவல்களின் பட்டியலில் புதியதாக இணைந்துள்ளது புகைப்படம் ஒன்று.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பெண் ஒருவர், தனது லாரி டிரைவர் தந்தையை விமானத்தில் முதல்முறையாக அழைத்துச் செல்கிறார் என்கிற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அப்புகைப்படத்தில் இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் விமானத்தில் அமர்ந்திருக்கிறார். இப்புகைப்படம், கடந்த சில மாதங்களாகவே வைரலாகப் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
மத்திய பிரதேச இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், அவரது லாரி டிரைவர் தந்தையும் என்கிற இப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் மூலம் ஆராய முற்பட்டோம்.
அப்போது, நமது நியூஸ் செக்கர் தமிழின் உண்மை சரிபார்ப்பு குழுவைச் சேர்ந்த செய்தி ஆசிரியர் ஒருவருக்கு அப்புகைப்படத்தில் இருக்கும் பெண், நன்கு அறிமுகமானவர் என்பது நமக்குத் தெரிய வந்தது.
மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் பெயர் பொன் விமலா. அவர் தமிழகத்தின் ராணிபேட்டையைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர். தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் இதழாசிரியராக சென்னையில் பணியாற்றியவர். அவர், தற்போது சென்னையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
மேலும், அவரது தந்தை லாரி டிரைவர் என்பது உண்மை என்றாலும், பொன் விமலா அவர்கள் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது பொய்யான செய்தியாகும். மேலும், அவரது பூர்வீகம் தமிழகத்தின் ராணிப்பேட்டையாகும்.
கடந்த 2019ம் ஆண்டு, ஜூன் மாதம் தனது தந்தையை முதல்முதலாக விமானத்தில் அழைத்துச் சென்றபோது இப்புகைப்படத்தை எடுத்து, அதனைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான வாசகங்களுடன் பதிவிட்டுள்ளார் அவர்.
அப்பதிவில்,
“அன்புள்ள அப்பா ❤
காலம் முழுக்க எங்களுக்காக லாரி ஓட்டுநராய் பணிபுரிந்தவர் என் அப்பா. குண்டு குழியுமான சாலைகளின் தரைவழிப் போக்குவரத்து மட்டும் தான் எங்களுக்கு சோறு போட்டது, படிக்க வைத்தது, உயிர் கொடுத்தது. வாழ்நாளில் என்றாவது ஒருநாள் அப்பாவை ஆகாயப் போக்குவரத்துக்கு அழைத்துச் செல்ல ஆசை எனக்கு. நெடுநாள் ஆசை இன்று நிறைவேறியது. அப்பாவின் அன்பு மட்டுமே என்னை உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்.❤’’
என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கடந்த டிசம்பர் மாதமே இப்பதிவு தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் கூட இப்பொய்ச்செய்தியுடன் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒன்றினை பொன் விமலா அவர்களே தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் சுட்டிக் காட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனை இங்கே இணைத்துள்ளோம்.

தனது தந்தை ஒரு லாரி டிரைவர் என்பதும், அவரது முதல் விமானப்பயணம் அது என்பதும் உண்மையென்றாலும், தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று பரவுகின்ற தகவல் பொய்யானது என்பதை அவரே மேற்கண்ட பதிவில் விளக்கியுள்ளார்.
எனவே, மத்திய பிரதேச ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது தந்தையும் என்று பரவுகின்ற புகைப்படத்தில் இருக்கும் பெண், உண்மையில் ஒரு பத்திரிக்கையாளர். மேலும், அப்புகைப்படம் குறித்து பரவும் வாசகங்கள் போலியானவை என்பதையும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விரிவாக விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இப்புகைப்படத்துடன் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Pon Vimala: https://www.instagram.com/p/ByMtHmRHSck/?utm_source=ig_web_copy_link
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)