Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஆச்சி மசாலா பாக்கெட்டுகளில் கலப்படம் செய்யப்படுகிறது. ஆண்மைக்குறைவு உண்டாக்கும் மருந்துகள் கலக்கப்படுகிறது. அவர்களை கைது செய்துள்ளனர் அதிகாரிகள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. அதனை நமக்கு அனுப்பி உண்மையறியும் சோதனை செய்யக் கேட்டிருந்தார் நியூஸ்செக்கர் தமிழ் வாசகர் ஒருவர்.

ஆச்சி மசாலா, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மசாலா பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும். மிளகாய் தூள், மஞ்சள் தூள் எனப் பல்வேறு உணவுப் பொருட்களும் இந்நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆச்சி மசாலாவின் தயாரிப்பு பொருட்களில் ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் மருந்து பொருட்கள் கலக்கப்படுவதாகவும், கலப்படம் செய்த தேசதுரோகிகளை அதிகாரிகள் கைது செய்தபோது எடுத்தப்படம்; ஆச்சி மசாலா வாங்காதீர்கள் ஆபத்து என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
அப்புகைப்படத்தை நமக்கு அனுப்பி அதுகுறித்த விளக்கத்தை நம்மிடம் கேட்டிருந்தார் வாசகர் ஒருவர். உண்மையறியும் சோதனையும் நடத்தக் கோரியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படச் செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஆச்சி மசாலா பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது என்று கூறி பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில், நமக்கு பல்வேறு முடிவுகள் இப்புகைப்படம் குறித்து கிடைத்தது. பல்வேறு செய்தி தளங்களும் இப்புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மையான செய்தியை பகிர்ந்துள்ளன. மேலும், அப்புகைப்படம் கடந்த 2020 வருடத்தில் இருந்தே வைரலாகி வருவதும் நம்மால் காண முடிந்தது.
உண்மையில், அப்புகைப்படத்தில் இருப்பவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு மசாலா பாக்கெட்டுகளுக்குள் போதை மருந்தினை மறைத்து வைத்து கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள் என்பது நமக்குத் தெரிய வந்தது.
இவர்கள் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதமே சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும் நமக்குத் தெரிய வந்தது. சுங்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படம் இல்லை.
இதுகுறித்து தமிழக பிஐபி, கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படத்துடன் “சென்னை விமான நிலைய சுங்கத்துறை: மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கொரியர் முனையத்தில் NDPS சட்டப்படி கைப்பற்றியது. பிரதான குற்றவாளியுடன் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் பிடிபட்டது” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து, ஆச்சி மசாலா நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்களுடைய மசாலா பாக்கெட்டுகளை கடைகளில் வாங்கி அதில் ரகசியமாக போதைப்பொருளை கடத்த முயன்றுள்ளனர். அதற்கும், ஆச்சி மசாலா நிறுவனத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் நமக்குத் தெரிய வந்தது.
ஆச்சி மசாலாவில் ஆண்மைக்குறைவு மருந்து கலக்கப்படுவதாகவும், அதற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்றும், ஆச்சி மசாலாவை உபயோகிக்காதீர்கள் என்பதாகவும் பரவும் புகைப்படம் தவறானதாகும் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Customs dept: https://twitter.com/ChennaiCustoms/status/1315976677189591041?s=20
Facebook Link: https://fb.watch/3ebHRa9fJ0/
PIB Tamil Nadu: https://twitter.com/pibchennai/status/1316007598978605057?s=20
India glitz: https://www.indiaglitz.com/drugs-smuggled-in-masala-packets-racket-busted-by-customs-sleuths–news-271761
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)