Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சிதம்பரம் நடராஜர் கோயிலின் முகப்பு மண்டம் மீது அமைந்துள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் இது.
இந்நிலையில், நேற்று முதல் சிதம்பரம் கோயில் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், சிதம்பரம் நடராஜர் கோயில் முகப்பு கோபுரத்தின் மீது அமைந்துள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிவது போன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழின் சில முன்னணி ஊடகங்களும், பல்வேறு சமூக வலைத்தளப்பக்கங்களும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். ‘சிதம்பரம் கோயில் அதிசயம்; நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்யும் அதிசயம்’ என்றெல்லாம் கூறி இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவு செய்தோம்.
வைரலாகும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய சமூக வலைத்தளங்களிலும், யூடியூபிலும் இது தொடர்பான வேறெதுவும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றனவா என்று ஆராய்ந்தோம்.
ஏனெனில், பகிரப்படும் வீடியோவில் நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிவது போல அமைந்துள்ளது. மேலும், கோபுரத்தை மட்டும் போகஸ் செய்திருப்பதால் மற்ற இடங்களில் மழை பொழிகிறதா இல்லையா என்பதை நம்மால் கணிக்க முடியவில்லை.
இந்நிலையில், நமது தேடலின் முடிவில் மேற்கண்ட வீடியோவுடன் இணைந்த மற்றொரு வீடியோ நமக்கு சமூக வலைத்தளங்களில் இருந்தே கிடைத்தது.
அந்த வீடியோவை ஆராய்ந்தபோது, சிதம்பரம் கோயில் முழுவதுமே மழை பொழிவது நமக்கு தெரிய வருகின்றது. மேலும் மற்ற சிலைகளில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளுடன் ஒப்பிடுகையில் நடராஜர் சிலையின் மீதிருக்கும் மின்விளக்கு மட்டும் சற்று சாய்ந்த வாக்கில் இருப்பது போன்று உள்ளது.
வாகனத்தில் செல்லும்போது ஹெட் லைட் வெளிச்சம் படும் இடத்தில் மட்டும் மழை பொழிவது போன்று தோன்றுவது போலவே இந்த வீடியோவிலும் மழை, நடராஜர் சிலை மீது மட்டும் பெய்வது போலப் பதிவாகியுள்ளது. இதனை சிலர் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளனர்.
மேலும், வீடியோவில் சற்று தொலைவில் காண்பிக்கப்படும் மற்றொரு கோபுரத்தில் அமைந்துள்ள இரண்டு சிலைகளின் விளக்குகளை உற்று கவனித்தால் அங்கும் மழைத்துளிகள் விழுவதை நம்மால் காண முடிகிறது. கீழே பகிரப்பட்டுள்ள பதிவில் உள்ள 0.17-0.18 நொடிகளில் உற்றுக் கவனித்தால் அதனைக் காண முடியும்.
எனவே, சிதம்பரம் நடராஜர் கோயில் முகப்பு கோபுரத்தில் அமைந்துள்ள நடராஜர் சிலையின்மீது மட்டும் மழை பொழிந்ததாக பரவும் வீடியோ ஆதாரமற்றது; தவறானது, அவ்வட்டாரம் முழுவதுமே மழை பொழிந்தது மட்டுமே உண்மை என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Twitter: https://twitter.com/Prashan70962302/status/1329238864959918081?s=20
Youtube: https://youtu.be/itjEHnUIwvk
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)