Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஹத்ராஸ் கூட்டு பலாத்கார சம்பவத்தில் உயிரிழந்தப் பெண்ணின் படம் என்று ஒரு படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியைச் சார்ந்த பட்டியலினப் பெண் ஒருவர், மேல் ஜாதியைச் சார்ந்த நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண் செப்டம்பர் 29 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தால் நாடே கொந்தளிப்பில் உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், செய்தி நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பலத்தரப்பட்டவர்களும் இந்நிகழ்வுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர்.
சமூக வலைத் தளங்களிலும் இந்நிகழ்வுக்கு எதிராகப் பலரும் தங்களைக் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின்படம் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் என்று பகிரப்படுகிறது. அப்படத்தில் ஒரு பெண் கரும்புத் தோட்டத்தில் நின்றபடி காட்சியளிக்கிறார்.
ஆனால் இது உண்மையில் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் இல்லை என்று இந்தியா டுடே கட்டுரை வெளியிட்டுள்ளது.

“ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அவர்கள் தொடர்புக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், இது என் சகோதரி அல்ல. எங்கள் குடும்பத்தாரும் கரும்புத் தோட்டத்தில் நின்றபடி புகைப்படம் எடுத்துள்ள இந்தப் பெண் யாரென்று தங்களுக்குத் தெரியாது என்ற உறுதிப்படுத்தியதாகவும் இந்தியா டுடே அதன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூல வீடியோவும் அவரின் புகைப்படங்கள் சிலவும் அவர்களுக்கு கிடைத்ததாகவும் கூறியுள்ளனர்.
அந்தப் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து இவ்விரு படங்களிலும் இருக்கும் பெண்கள் வெவ்வேறானவர்கள் என்று இந்தியா டுடே உறுதிப்படத் தெரிவித்துள்ளது.
ஹத்ராஸ் சம்பவத்தில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பெண் குறித்து மேலும் தேடுகையில் பாஸ்கர்.காம் எனும் இணையத்தளத்தில் இதுக்குறித்த செய்தி ஒன்று இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் மனிஷா யாதவ் ஆகும். இவர் சண்டிகரைச் சார்ந்தவர். உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி அன்று இவர் உயிரிழந்துள்ளார்.
இவரின் புகைப்படமே ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
நான் ஏற்கனவே என் மகள் இழப்பில் காயப்பட்டு உள்ளேன். இந்நிலையில் என் மகள் குறித்து இவ்வாறு ஒரு செய்தி பரவுவது எனக்கு மிகப்பெரிய இடியாக உள்ளது. இதுக்குறித்து ஏற்கனவே நான் சண்டிகர் SSP அவர்களிடம் புகார் அளித்துள்ளேன் என்று மனிஷா யாதவின் தந்தை மோஹன் லால் யாதவ் தெரிவித்ததாக பாஸ்கர்.காமின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் என்று பகிரப்படும் பெண்ணின் படம் உண்மையானது அல்ல. அப்பெண் உண்மையில் சண்டிகரைச் சார்ந்தவர் என்று நம் விரிவான ஆய்வின் மூலம் தெளிவாகிறது.
Twitter Profile: https://twitter.com/Neelam_Culture/status/1311185212429139968
Twitter Profile: https://twitter.com/SmS7_1986/status/1311388385131589632
India Today: https://www.indiatoday.in/fact-check/story/wrong-girl-goes-viral-on-social-media-as-hathras-victim-1726722-2020-09-29
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)