Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மத்திய பிரதேச பாஜக அரசால் அமைக்கப்பட்ட நவீன தானியக்கிடங்கு என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்காணக்கான டன் உணவுப்பொருட்கள், தானியங்கள் வீணடிக்கப்பட்டு மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். கொரோனா பாதிப்பால் கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் முழு ஊரடங்கினை ஒன்றிய அரசு அறிவித்த நிலையில் ஆயிரக்கணக்கான டன் தானியங்கள் வீணாகின.
இந்த நிலையில்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் உணவு தானியங்களை உரிய வகையில் சேமிக்க நவீன வகையிலான உணவு தானிய சேமிப்பு கிடங்கினை அமைத்திருப்பதாகவும், முந்தைய ஆட்சிக் காலத்தில் சரியான பராமாரிப்பு இல்லாமல் இருந்ததாகவும் புகைப்படம் ஒன்று வைரலாகிறது.
“இத்தனை ஆண்டுகளாக ஆண்டவர்கள் வைத்திருந்த சேமிப்புக் கிடங்கு. மத்திய பிரதேஷ் பிஜேபி அரசு தற்போது கட்டியுள்ள நவீன தானியக் கிடங்கு” என்னும் வாக்கியங்களுடன் இப்புகைப்படம் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மத்திய பிரதேச அரசால் அமைக்கப்பட்ட நவீன தானியக்கிடங்கு என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படத் தகவல் குறித்த உண்மை நிலை அறிய குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
தேடலின் முடிவில் அலாலே என்கிற பெர்ஷிய மொழியில் அமைந்துள்ள இணையப்பக்கம் ஒன்று நமக்குக் கிடைத்தது.
அதில்,கஸகஸ்தான் நாட்டின் சுற்றுலா குறித்த கட்டுரை ஒன்றில் சோவியத் யூனியனில் 30 முதல் 50 ஆண்டுகால பழமையான இந்த தானியக்கிடங்கு அமைந்துள்ளதாகவும், மிகமுக்கியமாக சோவியத் யூனியனில் கோதுமையைப் பயிரிட தகுந்த நிலப்பகுதி, மண்வளம் இல்லாத காரணத்தினால் இந்த கிடங்கு கோதுமை சேகரிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவலுடன் குறிப்பிட்ட வைரல் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
மேலும், ஷட்டர் ஸ்டாக் இணையதளத்தில் குறிப்பிட்ட கிடங்கின் சிறு வீடியோ பகுதிகளும் பதிவிடப்பட்டுள்ளன. அதேபோன்று, டேவிட்எம்சிகேஇஇ என்கிற இணையப்பக்கத்தில் இப்புகைப்படத்தின் பின்புறமும் தெரியும் வகையில் பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்ட அந்த தளத்தை உள்நுழைந்து பார்வையிட முடியவில்லை.
மேலும், மத்திய பிரதேசத்தில் இதுபோன்று தானியக்கிடங்கு எதுவும் அமைக்கப்பட்டிருக்கிறதா என்று தேடியபோது கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் தானியக்கிடங்குகள் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆனால், குறிப்பிட்ட அக்கிடங்குகள் தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தற்போது வைரலாகும் இப்புகைப்படம் அதற்கு முன்பாகவே 2013 ஆம் ஆண்டே இணையதளங்களில் பதிவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குறிப்பிட்ட அப்புகைப்படத்தை வேறு சில புகைப்படங்களுடன் ஒப்பிட்ட போது அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் குறித்த இணையப்பக்கத்திலும் இதற்கு இணையான புகைப்படம் ஒன்று நமக்குக் கிடைத்தது.
எனினும், வைரல் புகைப்படமோ கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குறிப்பிட்ட புகைப்படம் ரஷ்யாவில் எடுக்கப்பட்டிருந்தாலும், தனியார் நிறுவனத்தைச் சார்ந்தது என்றாலும் அது மத்திய பிரதேச அரசால் அமைக்கப்பட்ட கிடங்கு அல்ல என்பது நமக்கு உறுதியானது.
தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மழையின் காரணமாக மத்திய பிரதேசத்தில் சரியான பாதுகாப்பு இன்றி ஷஜப்பூரில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கோதுமை மூட்டைகள் சேதமடைந்தது குறித்து ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச பாஜக அரசால் அமைக்கப்பட்ட நவீன தானியக்கிடங்கு என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படத் தகவல் தவறானது; ஆதாரமற்றது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
ANI: https://twitter.com/ANI/status/1276384751541092352?s=20
TradeArabia: http://www.tradearabia.com/news/LAW_245186.html
Alale: https://www.alale.co/fa/a/Toplandscapes
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)