Fact Check
Fact Check: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறதா?
Claim: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறது.
Fact: வைரலாகும் பதிவு உண்மையில் நையாண்டியாகப் பதிவிடப்பட்டதாகும்.
உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறது என்று பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்திக்கும் மதுராவுக்கும் நடுவே உலகின் அதி நவீன நானோ டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் மிக மிக பிரம்மாண்டமான சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் 916 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது! இது ஒட்டு மொத்த நியூயார்க் & வாஷிங்டன் நகரங்களின் பரப்பளவாகும்.
ஒரே நேரத்தில் 1000 சரக்கு (டாஸ்மாக் அல்ல) விமானங்கள், 2000 பயணிகள் விமானங்களை இங்கு நிறுத்தலாம். உலகில் முதல் முறையாக இங்கு தான். Four way டிராக் ரன் வே அமைக்கப்படுகிறது! நான்கு விமானங்கள் ஒரே சமயத்தில் ஏறவும் இறங்கவும் முடியும்! இது போல Four way டிராக் ரன்வேக்கள் மொத்த நான்கு (16டிராக்) அமைக்கப்படவுள்ளது. இது நம் நான்கு வேதங்களை குறிப்பதாகும்!
இந்த விமான நிலைய ஓடு பாதைகளை ஏரியல் வியூவில் இருந்து பார்த்தால் இராமர் வனவாசம் சென்ற வழித்தடம் போலவும், விமான நிலைய கட்டிடங்களை பார்த்தால் மதுராபுரியில் கிருஷ்ணர் வாழ்ந்த இடம் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது!
இந்த விமான நிலையத்தின் உள்ளே 5 இரயில்வே ஸ்டேஷன்களும் (பஞ்ச பாண்டவர்கள்) 10 பஸ் ஸ்டாண்டுகளும் (தசாவதாரம்) அமைய உள்ளன! மக்கள் வசதிக்காக பிக்சர் இன் பிக்சர் போல இந்த ஏர்போர்ட்டிற்குள் கூடுதலாக ஒரு விமான நிலையமும் அமைக்கப்படவுள்ளது! மொத்தம் 7 டெர்மினல்கள் (சப்த ரிஷிகள்) அமைக்கப்படவுள்ளன. இதில் 3 சர்வதேச டெர்மினல்கள் 3 டொமஸ்டிக் டெர்மினல்கள் மற்றது தனியார் மற்றும் இராணுவத்திற்காக என திட்டமிட்டு கட்டப்பட்டு வருகிறது!
ஒரே நேரத்தில் 10ஆயிரம் பேர் உட்கார்ந்து படிக்க ஶ்ரீவால்மீகி எனும் மிகப் பெரிய லைப்ரரியும், 5000 பேர் அமர்ந்து இணையத்தை உபயோகிக்கும் டிஜிட்டல் பாரத் மஹால் என்னும் இடமும் கட்டப்பட்டு வருகிறது. பணம் செலுத்தினால் கோயூரின், கோடங் டெலிவரி செய்யும் 50ஆயிரம் கோ வெண்டிங் மிஷின்கள் ஏர்போர்ட் முழுவதும் அமைக்கப்படுகின்றன! உருத்திராட்சம், காவி உடைகள், விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற மங்கலப்பொருட்களை விற்க 400 டூட்டி ஃப்ரீ..கடைகள் அமைக்கப்படவுள்ளன!
விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் விமானங்களின் ஓடு பாதை மஞ்சள் நிறத்திலும் (இராமர்) வந்திறங்கும் விமானங்களின் ஓடு பாதை நீல நிறத்திலும் (கிருஷ்ணர்) அமைவது இதன் தனிச்சிறப்பாகும்! கார்கோ விமான நிலையத்திற்கு ஶ்ரீ வாமனா இண்டர்னேஷனல் கார்கோ என்றும் அயோத்திக்கும் மதுராவுக்கும் இடையே என்பதால் இதற்கு ஶ்ரீராமகிருஷ்ணா இண்டர்னேஷனல் ஏர்போர்ட் என்றும் பிற விமான நிலையங்களுக்கு அய்யா கோட்சே, புல்புல் சர்க்கார்..
சர்தார்ஜி, வீரஹனுமன், அர்ஜுனன் ஆகிய பெயர்களை பரிசீலித்து வருகிறார்கள்.
பண்டிட் சிரோன்மணி ராம்கோவிந்ததாஸ் என்னும் வேத, விஞ்சான, சாஸ்த்திர, சம்பிரதாய அறிஞரின் தலைமையில் 345 ரிஷிகள் இந்த திட்டங்களை வகுத்து ஆலோசனையும் அளித்து வருகிறார்கள்! இதை அடுத்த ஆடிக்குள் நமது ஜி நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டால் ஆவணியில் இந்தியா டாப்புக்கு வந்துவிடும் என பாரத் மாத்தா மீது ஆணையாக அவர்கள் அனைவரும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்! இந்த விமானநிலையம் மட்டும் திறந்துவிட்டால் உலகப் பொருளாதாரம் அனைத்தும் இந்தியாவில் குவிந்து ஒரு மணிநேரத்தில் 50 டிரில்லியன் டாலர் பி.எம் கேரில் வந்து சேர்ந்துவிடும் என நிர்மலா ஜி குறிப்பிட்டுள்ளார்!
ஜோ பைடனும் புடினும் இனி அமெரிக்காவும் ரஷ்யாவும் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிடும் என புலம்புகிறார்கள்! சீனா பதட்டத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் படுத்தேவிட்டது! ஒற்றை ஏர்போர்ட்டில் ஒட்டு மொத்த உலகின் கவனத்தை ஈர்த்து பருப்பெடுக்க ஜி ஒருவரால் தானே முடியும்!பெருமிதத்துடன் சொல்வோம்..பாரத் மாத்தா கீ ஜே
” என்பதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


நம்முடைய வாசகர் ஒருவர் இதனை நமக்கு அனுப்பி உண்மையா என்பதாக கேள்வி எழுப்பியிருந்தார். சமூக வலைத்தளங்களிலும் இத்தகவல் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
Fact Check/Verification
உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறது என்பதாகப் பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சமூக வலைத்தளத்தில் எழுத்தாளர் மற்றும் நகைச்சுவைக் கலைஞரான வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர், அரசியல் சார்ந்து நையாண்டிப் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அவர், குறிப்பிட்ட உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் என்கிற நீண்ட பதிவை நையாண்டியாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அப்பதிவின் கீழேயே அது நையாண்டி என்பதற்கு ஏற்ப கமெண்டுகளும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து நாம் வெங்கடேஷ் ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரும் அது நையாண்டியான பதிவு என்று விளக்கமளித்தார்.

ஆனால், இப்பதிவையே பலரும் உண்மை என்பதாகப் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா?
Conclusion
உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறது என்பதாகப் பரவுகின்ற தகவல் ஒரு நையாண்டிப் பதிவு என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Satire
Our Sources
Facebook Post From, Venkatesh Arumugam, Dated May 13, 2023
Conversation With, Venkatesh Arumugam, Dated May 17, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)