Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் மட்டும் கொடுத்த பாஜகவினர் என்றும், புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்ட மருத்துவர்கள் என்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு தரப்பு கருத்துக்களும், பல்வேறு வதந்திகளும் கூட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாமல் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்ட பாஜகவினர் என்றும், புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் என்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கூடவே, இச்செய்தியை பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் இருப்பவர்கள் பாஜகவினரா அல்லது மருத்துவர்களா? உண்மையிலேயே அவர்கள் தடுப்பு மருந்தினை எடுத்துக் கொள்ளவில்லையா? என்பதன் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் உரிய வகையில் ஆய்வு நடத்தினோம்.
வீடியோவின் சில பகுதிகளை ‘ரிவர்ஸ் சர்ச்’ முறைக்கு உட்படுத்தியபோது குறிப்பிட்ட அந்த வீடியோவில் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பவர்கள் கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தின் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் நாகேந்திரப்பா மற்றும் அரசு நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் ரஜனி என்பதை நம்மால் கண்டறிய முடிந்தது.
எனவே, அவர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவது போல பாஜகவினைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதியானது.
மேலும், இச்சம்பவம் குறித்து செய்தி இணையதளமான நியூஸ்செக்கர் தமிழ் வெளியிட்டிருந்த உண்மையறியும் சோதனை பற்றியும் நாம் அறிந்து கொண்டோம்.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தும்கூர் மாவட்ட துணை ஆணையராகப் பதவி வகிக்கும் டாக்டர்.கே.ராகேஷ் குமார் ஐ.ஏ.எஸ் மூலமாக வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் நாகேந்திரப்பா அவர்களிடம் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் குறிப்பிட்ட அந்த வீடியோ குறித்து விளக்கம் கேட்டோம்.
அதுகுறித்து நாகேந்திரப்பா அவர்கள், “நானும், மருத்துவர் ரஜனியும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்றே கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டு விட்டோம். ஆனால், அன்று புகைப்படம் எதுவும் சரியாக எடுக்கப்படவில்லை என்பதால் மீடியாக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தோம். ஆனால், சிலர் அதை தவறுதலாக வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டனர்.
மருத்துவர்களான நாங்கள் கொரோனா களத்தில் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் நாங்களே தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாமல் இருப்போமா? நானும், மருத்துவர் ரஜனியும் ஏற்கனவே தடுப்பூசியை எடுத்துக் கொண்டுவிட்டோம். இது புகைப்படத்திற்காக கொடுக்கப்பட்ட போஸ் மட்டுமே” என்று விளக்கமளித்தார்.
மருத்துவர் நகேந்திரப்பா அவர்களின் மேற்கண்ட தொலைபேசி உரையாடலையும் நியூஸ்செக்கர் சார்பில் பதிவு செய்து வைத்துள்ளோம்.
எனவே, தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் போஸ் கொடுத்த பாஜகவினர்; போஸ் மட்டும் கொடுத்த மருத்துவர்கள் என்றெல்லாம் வைரலாகும் வீடியோ குறித்த தகவல் தவறானதாகும் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Tumkur Deputy Commisioner: https://tumkur.nic.in/en/contact-us/
DHO Tumkur: Doctor Nagendrappa
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)