அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பழைய சேர் ஒன்றில் அமர்ந்து, கைகளைக் கட்டிப் பேசியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு வாழ்த்து தெரிவிக்க சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவரை நேரில் சந்தித்து பேசியது தொடர்பாக புகைப்படங்கள் வெளியானது.
ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் திருமாவளவன் கைகட்டி அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. அதே போன்று, திருமாவளவன் அமர்வதற்கு ஒரு பழைய நாற்காலி கொடுக்கப்பட்டதாகவும் புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அமைச்சர் சாதிய மனநிலையுடன் செயல்படுகிறார்; திருமாவளவன் அடிபணிந்து செயல்படுகிறார் என்பதாக இப்புகைப்படங்களைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களும் வைரலாகி வருகின்றன.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைகளைக் கட்டி அமர்ந்திருந்ததாகவும், பழைய நாற்காலியில் அமர்ந்ததாகவும் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
திருமாவளவன் அமைச்சர் முன்பு கைக்கட்டி அமர்ந்திருந்தாரா என்பது குறித்து அறிய திருமாவளவன் அவர்களது செயலாளரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அவர், “பெரும்பாலும் அண்ணன் கைட்டி பேசுவது அவருடைய மேனரிசம். எங்கள் அனைவரிடமுமே அவர் அப்படித்தான் பேசுவார். ஆனால், அதனை தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திரு.பாலசிங்கம் உடன் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “அண்ணன் ராஜகண்ணப்பன் உடன் எங்களுக்கு பல்லாண்டு காலப் பழக்கம். குறிப்பிட்ட சந்திப்பின்போது நானும் உடன் இருந்தேன். மற்றொரு புறம் இருந்த சோபாவில் அண்ணன் திருமாவளவனை அமைச்சர் அமரச்சொன்னபோது முகம் மறைக்காமல் உரையாடவே அண்ணன் திருமா அங்கே அருகில் கிடந்த சேரை இழுத்து அமர்ந்து உரையாடினார். மேலும், கைகளைக் கட்டிக் கொண்டும், எளிமையாகவும் உரையாடுவது அவரது வழக்கம். எங்கள் அனைவரிடமுமே பேசும்போது அவர் அப்படித்தான் இயல்பாக பேசுவார். இதனை பலரும் தவறுதலாக சித்தரித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இந்த சர்ச்சை குறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். அதனையும் இங்கே இணைத்துள்ளோம்.
Conclusion:
அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை பழைய சேர் ஒன்றில் கைகளைக் கட்டிக் கொண்டு அமரச் செய்ததாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
Facebook: https://www.facebook.com/lodukkuPandii/videos/848082486136835/
VCK Party Members
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)