விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற கடல்நீரை திருப்பி விடுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறியதாக கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமே மிகவும் பரப்பரப்பாக காணப்படுகின்றது. இம்முறை எப்படியாவது அதிகாரத்தை பெற்று வேண்டும் என்று ஒவ்வொரு வேட்பாளர்களும் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
இவ்வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களும் தான் போட்டியிடவிருக்கும் ராஜபாளையம் தொகுதியில் பல வாக்குறுதிகளை அளித்து வருகின்றார்.
அதில் ஒன்றாக, “வீணாக கிடக்கும் கடல்நீரை திருப்பி விட்டு, ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன்” என்கிற வாக்குறுதியையும் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/6td15

Archive Link: https://archive.ph/HIjmH
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் சர்ச்சைக்குரிய பேச்சுகளையும் தவறான விஷயங்களையும் அடிக்கடி பொதுவெளியில் பேசி வருகின்றார்.
சமீபத்தில் கூட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து ராஜேந்திர பாலாஜி அவர்கள் பேசுகையில், ‘மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்துக் குடித்தால் கொரோனாவிலிருந்து எல்லாமே நம்மை விட்டு ஓடிவிடும்’ என்று பேசினார்.
அமைச்சரின் இந்த கருத்தை நியூஸ்செக்கர் தமிழ் தரப்பில் ஆய்வு செய்து, அது தவறான ஒன்று என்று உரிய ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம். அச்செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதனைத் தொடர்ந்து, தற்போது கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்று அமைச்சர் கூறியதாகக் கூறி நியூஸ் 7 தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
உண்மையில் இவ்வாறு ஒரு வாக்குறுதியை ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறினாரா என்பதை அறிய, முதலில் நியூஸ் 7 தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.
அவ்வாறு தேடியதில் இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்றாகும்.
உண்மையில் பிரச்சாரத்தின்போது,
“கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை திருப்பிவிட்டு ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன்”
என்றே ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
இந்த தகவலானது நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படச் செய்தியே எடிட் செய்யப்பட்டு ராஜேந்திர பாலாஜி அவர்கள் கடல்நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவேன் என்று கூறியதாக சமூக வலைத்தளப் பக்கங்களில் பரப்பப்படுகின்றது.
வாசகர்கர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும் எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion
“வீணாக கிடக்கும் கடல்நீரை திருப்பி விட்டு, ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரப்படும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1372128893168054276
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)