பாரதப் பிரதமர் மோடி 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று எண்ணி பாஜகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரையும் மற்ற பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) தாராபுரம் – உடுமலை சாலையில் பிரச்சாரம் செய்தார்.
பிரதமர் மோடி பேசும்போது, “234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று எண்ணி பாஜகவுக்கு வாக்கு செலுத்துங்கள். தாமரை மலர்ந்தே தீரும்” என்று பேசியதாக நியூஸ் 7 தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி சென்னிமலை அவர்கள் “234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” எனும் தலைப்பிட்டு இப்புகைப்படச் செய்தியை அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் பலரும் இப்புகைப்படச் செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/sXwRw

Archive Link: https://archive.ph/4mRsR

Archive Link: https://archive.ph/6sbuf
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல், 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று எண்ணி பாஜகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று மோடி அவர்கள் பேசினாரா என்பதை அறிய, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இவ்வாறு புகைப்படச் செய்தி பதிவிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம்.
இவ்வாறு தேடியதில் வைரலாகும் புகைப்படச் செய்தியை நியூஸ் 7 தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.
இதன்பின் வைரலாகும் இச்செய்திக் குறித்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் துறையைத் தொடர்புக் கொண்டு கேட்டோம். அவர்கள்,
“இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இது பொய் செய்தி”
என்று நமக்கு விளக்கமளித்தனர்.
இதன்பின் வைரலாகும் புகைப்படச் செய்தியை கூர்ந்து கவனித்ததில், அது எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது. மோடி அவர்களின் தாராபுரம் பரப்புரை தொடர்பாக 4 புகைப்படச் செய்திகளை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்தது.
அதில் ஒரு புகைப்படச் செய்தியை எடிட் செய்தே 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று எண்ணி பாஜகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று மோடி கூறியதாக பரப்பி வருகின்றனர்.
வாசகர்கர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும் எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion
234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று எண்ணி பாஜகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியதாக ஜோதிமணி உள்ளிட்டோர் பகிர்ந்த புகைப்படச் செய்தியானது, எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Ms. Jothimani Sennimalai: https://www.facebook.com/jothiiyc/posts/3896060047155846
News 7 Tamil digital department: –
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)