பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்ற தொனியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கடந்த வியாழனன்று (ஆகஸ்ட் 5) தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
இப்போராட்டத்தில் அண்ணாமலை அவர்கள் பேசும்போது, “தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப்படுத்தினால் விட மாட்டோம். மீறி பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையை வைப்போம். அவர்கள் செய்யும் துரோகத்தை பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடி போல கொடுப்போம்.” என்று பேசியதாக ஜூனியர் விகடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சி குறித்து நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் ஒவ்வொருவருக்கும் பலவித கருத்துக்கள் இருக்கும். இதில் எதிர்மறையாக கருத்துக்கள் கூறுவர்களின் தொழிலுக்கு பிரச்சனை தருவோம் என்று கூறுவது சர்வாதிகாரத்தனம் என்று கூறி பலரும் இதுக்குறித்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுகுறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அதிகம் பொய் பேசும் நபராக அருணன் முதலிடம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
Fact Check/Verification
தஞ்சைப் போராட்டத்தில், பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்ற தொனியில் அண்ணாமலை பேசியதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, உண்மையிலேயே அண்ணாமலை இவ்வாறு பேசினாரா என்பது குறித்து தேடினோம்.
நம் தேடலில் “அண்ணாலை அவர் ஹோப்” (Annamalai Our Hope) எனும் யூடியூப் பக்கத்தில் தஞ்சாவூர் உண்ணாவிரதப் போராட்டத்தின் முழு நிகழ்வும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
இதில் அண்ணாமலை அவர்கள் பேசும்போது திமுகவினரையும், பாஜகவை விமர்சித்த மற்ற கட்சியினரையும் விமர்சித்து பேசினார். இதில் முக்கியமாக திமுக எம்.பியான தயாநிதி மாறன் அவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார் அண்ணாமலை.
தமிழக மக்களுக்கு உண்மையாக வேலை செய்யக்கூடிய பாஜகவைப் பற்றி இன்னொரு முறை தயாநிதி மாறன் அவர்கள் கொச்சைப்படுத்தினால் எல்லா விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும் என்று அவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இதை அவர்களின் தொலைக்காட்சியின் வழியாகவே எச்சரிக்கின்றேன். நேரிடையாக. கர்நாடகாவில் நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள், இந்தியாவில் என்னென்ன செய்தீர்கள்? நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது உங்களுக்கு கொடுத்த கனெக்ஷன்களை உங்கள் தொலைக்காட்சிக்கு தந்தீர்கள் என எல்லாத்தையும் பேசுவோம், அதற்கெல்லாம் பயம் கிடையாது.
என்று அண்ணாமலை பேசினார்
மேலும் அவர் பேசுகையில்,
எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழக விவசாயிகளைக் கொச்சைப்படுத்த நாங்கள் விட மாட்டோம். கொச்சைப்படுத்தினால் எங்கள் பதிலடி நேராக இருக்கும், தீர்க்கமாக இருக்கும். அவர்கள் பிஸ்னஸ்லிருந்து கை வைத்து பேசுவோம். இதுவரை அரசியலில் நான் உனக்கு நண்பன், நீ எனக்கு நண்பன் என்று மேம்போக்காக பேசியதுபோல் அல்ல. அடிப்படை வரை போய் பேசுவோம். நீங்கள் செய்த துரோகங்களை ஒவ்வொன்றாக பட்டியலிடுவோம்.
அதனால் அரசியலை அரசியலாக எதிர்கொள்ளுங்கள். அரசியலாக விமர்சனங்கள் வையுங்கள், பதில் சொல்கிறோம். எங்களுடைய கடமையது. மத்தியில் ஆளுங்கட்சியாக, மாநிலத்தில் ஒரு எதிர்கட்சியாக எங்களுடைய கடமை, நாங்கள் பேசுவோம். அது எங்கள் நோக்கமும் கூட.
ஆனால் காழ்ப்புணர்ச்சிகாக விவசாயிகளை கொச்சைப்படுத்தினால், எந்த காரணத்திற்காகவும் நாங்கள் பொறுக்க மாட்டோம். எங்கள் பதிலடி சம்மட்டி அடிபோல் இருக்கும் என்று அனைத்துக் கட்சி நண்பர்களுக்கும் கூறி கொள்கின்றேன்
என்று அண்ணாமலை பேசினார்.
இதன்மூலம் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால் பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்ற தொனியில் தமிழக பாஜக தலைவர் பேசியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
அண்ணாமலை அவர்கள் தயாநிதிமாறன் அவர்களின் விமர்சனத்துக்கு பதில் விமர்சனம் அளித்துள்ளார். மேலும் பிஸ்னஸில் கை வைத்து அடிப்படை வரை பேசுவோம் என்று பேசியது கூட விவசாயிகளை கொச்சைப்படுத்துபவர்களைத் தானேயொழிய மற்றவர்களை கிடையாது.
Also Read: பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ட்விட்டரில் நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்து தெரிவித்தாரா?
Conclusion
பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்ற தொனியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக பரவும் தகவல் திரித்து பரப்பப்பட்ட தகவல் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Annamalai Our hope YouTube Channel video
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)