உத்திரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த மனைவியின் உடலை அப்பாவும் மகனும் மூட்டைக் கட்டித் தூக்கி சென்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கொரானா பரவலின் இரண்டாம் அலை காரணமாக நம் நாடு மிகப்பெரிய துன்பத்தை அடைந்து வருகின்றது. ஆக்ஸிஜன தட்டுப்பாடு, சரியான மருத்துவ வசதி இல்லாமை போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றது.
இதனிடையே இந்த துன்பங்களுக்கெல்லாம் மத்தியில் ஆளும் பாஜகவின் நிர்வாகத் திறனின்மையும் அராஜகப் போக்கும்தான் காரணம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பலர் பேசி வருகின்றனர்.
அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத் மற்றும் உத்திரப் பிரதேசத்தை முன்னிறுத்தி பல தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.
அத்தகவல்களின் வரிசையில், உத்திரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த மனைவியின் உடலை ஒடித்து மடக்கி மூட்டையாக கட்டி, கணவனும் மகனும் தூக்கி சென்றதாக புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/pglAf

Archive Link: https://archive.ph/hEZq2

Archive Link: https://archive.ph/LsXTa
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
உத்திரப் பிரதேசத்தில் இறந்த மனைவியின் உடலை தந்தையும் மகனும் மூட்டைக் கட்டித் தூக்கிச் சென்றதாக பரவிய தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலாகும் புகைப்படத்தில் இருந்த இரண்டு புகைப்படங்களையும் கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு ஆய்வு செய்ததில் வைரலாகும் புகைப்படம் குறித்த உண்மையை நம்மால் அறிய முடிந்தது. ஒன் இந்தியாவில் வைரலாகும் படங்கள் குறித்து செய்தி வெளிவந்திருந்தது.
உண்மையில் இறந்த மனைவியின் உடலை தந்தையும் மகனும் மூட்டைக் கட்டித் தூக்கிச் சென்றதாக கூறி பரவும் படத்தில் இருக்கும் படங்கள் உத்திரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டதே அல்ல, அவை உண்மையில் 2016 ஆம் ஆண்டு ஒரிசாவில் எடுக்கப்பட்டவையாகும். அதேபோல் இப்படங்களில் காணப்படும் ஆண்கள் இறந்து போன பெண்மணியின் கணவனும் மகனும் அல்ல. அவர்கள் மருத்துவமனைப் பணியாளர்கள் ஆவர்.

வைரலாகும் படத்தில் காணப்படும் பெண்மணி ஒரிசாவின் பாலசூர் மாவட்டத்தில் இருக்கும் சோரோ இரயில் நிலையத்தின் அருகில் சரக்கு ரயில் ஒன்றில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
இதன்பின் அவரது உடல் அருகிலிருந்த சோரோ கம்யூனிட்டி சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்பின் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அவரது உடல் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பாலசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலும், ஆட்டோ ரிக்ஷாக்காரர்கள் ரூ. 3500 கேட்டதாலும், இறந்தவரின் உடல் அங்கிருந்த பணியாளர்களால் முறிக்கப்பட்டு, மூட்டையாகக் கட்டி, அருகிலிருந்த ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லபட்டு, அங்கிருந்து பாலசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
Conclusion
உத்திரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த மனைவியின் உடலை அப்பாவும் மகனும் மூட்டைக் கட்டித் தூக்கி சென்றதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட புகைப்படங்கள் குறித்து ஆராய்ந்து, அப்புகைப்படங்கள் உத்திரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டதல்ல, அவை ஒரிசாவில் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதென்பதையும், இறந்தவரின் உடலை மூட்டைக் கட்டி சென்றவர்கள், அப்பெண்மணியின் கணவனும் மகனும் அல்ல, அவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
One India: https://hindi.oneindia.com/news/india/inhuman-act-odisha-broken-the-bones-dead-body-383867.html
Indian Express: https://indianexpress.com/article/india/india-news-india/no-ambulance-odisha-womans-body-broken-at-hip-slung-on-bamboo-pole-2996634/
India TV News: https://www.indiatvnews.com/news/india-odisha-shocks-again-dead-women-s-body-broken-at-hip-slung-on-bamboo-345352
Hindustan Times: https://www.hindustantimes.com/india-news/dead-accident-victim-s-legs-hip-broken-for-easy-transport-probe-ordered/story-eTFZxIdGEKGHu9DCrFer9H.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)