Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் – முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு
Fact
பரவிய செய்தி தவறானதாகும். அவர் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் அப்பாதையில் தெளிவான கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்பதாகப் பேசியிருந்தார்.
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அரசியல் ஆரோக்கியமானது இல்லை, இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்” என்று முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact check: நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் செல்லவிருக்கிறேன் என்றாரா பாஜக எஸ்.ஜி.சூர்யா?
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சென்னையில் நடைபெற்ற Sapiens Health Foundation 25ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார் முன்னாள் துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு,
“நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்பதை பத்திரிக்கையாளர் குருமூர்த்தி மூலமாக தெரிந்து கொண்டேன். உடனடியாக குருமூர்த்தியைத் தொடர்பு கொண்டு, தயவுசெய்து என் சார்பில் அவருக்கு நீங்கள் அறிவுரை கூறுங்கள்; அவர் அதைச் செய்யவேண்டாம் என்று கூறினேன். அதற்கு அவர், `அவர் அரசியலுக்கு வருவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்’ என்று பதிலளித்தார். மக்களுக்கு சேவை செய்ய இதைவிட சிறப்பான பல வழிகள் இருக்கின்றன; என்னுடைய அனுபவத்தால் நான் இதை சொல்லுகிறேன்; ஏனெனில், ரஜினிகாந்த் அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். இது அவருக்கு நல்லதல்ல என்று நான் கூறினேன். குரு என்னையே அவரிடம் நேரிடையாக பேசச் சொன்னார். எனவே, ரஜினிகாந்த் அவர்களுக்கு நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் கருத்தைக் கூறினேன். அவர் முன்பே தனது உரையில் சொன்னது போல கொரோனாவிற்கு நன்றி; அவர் அரசியலுக்கு வரவில்லை. ஏனெனில், அரசியல் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அரசியலில் சேராதீர்கள். நீங்கள் அரசியலில் சேர வேண்டும் என்று நினைத்தால் அதிலேயே நிலைத்திருக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்காக நான் அரசியலில் சேர விரும்புபவர்களின் ஆர்வத்தை குறைக்கவில்லை. ஏராளமான இளைஞர்கள் அரசியலில் சேர வேண்டும். ஆனால், அவர்கள் நேர்மையாக, ஒழுக்கமானவர்களாக, அர்ப்பணிப்புடன் மற்றும் எடுத்த கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும். இவற்றுடன் மட்டுமே அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு இதுவே என்னுடைய அறிவுரை”
என்று பேசியிருந்தார்.
இந்த செய்தியே தற்போது முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று கூறியதாகப் பரவுகிறது.
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video From, News 18 Tamil Nadu, Dated March 11, 2023
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.