கொரானா தடுப்பூசி செலுத்தி 23 முதியவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

Fact Check/ Verification
கடந்த சனிக்கிழமையன்று நாடு முழுவதும் முதற்கட்ட கொரானா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைப்பெற்றது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரானா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் தடுப்பூசியை மருத்துவ கவுன்சிலின் தலைவர் செந்தில் போட்டுக்கொண்டார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழந்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 முதியவர்கள் உயிரிழந்ததாக பரவும் செய்தியானது நியூஸ் 18 தமிழ்நாட்டில் வெளிவந்த செய்தியின் அடிப்படையிலேயே பரப்பப்படுகிறது.
ஆகவே இவ்வாறு ஒரு செய்தி நியூஸ் 18 தமிழ்நாட்டில் வெளிவந்ததா என்பதை அறிய இதுக்குறித்து தேடினோம். அவ்வாறு தேடியதில் இச்சம்பவத்தின் பின்னணியில் இருந்த உண்மையை நம்மால அறிய முடிந்தது.
உண்மையில் இச்சம்பவம் நார்வே நாட்டில் நடைப்பெற்றதாகும். அந்நாட்டில் ஃபைசர் பையோன்டெக் தயாரித்த தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுள் 23 முதியவர்கள் இறந்துள்ளனர். இதுக்குறித்த செய்தியே நியூஸ் 18 தமிழ்நாட்டில் வந்துள்ளது.
ஆனால் “கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு!’ – அதிர்ச்சியில் மருந்து நிறுவனங்கள்” என்று தலைப்பிட்டு இச்செய்தி முதலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே இச்சம்பவம் இந்தியாவில் நடந்ததாக எண்ணி சமூக வலைத்தளங்களில் தடுப்பூசி குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டுள்ளது.
இதன்பின் நியூஸ் 18 தமிழ்நாடு, “நார்வே : `கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு!’ – அதிர்ச்சியில் மருந்து நிறுவனங்கள்” என்று இச்செய்தியின் தலைப்பை மாற்றி பிரசுரித்திருந்தது.

Conclusion
கொரானா தடுப்பூசி செலுத்தி 23 முதியவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Incorrect
Our Sources
Facebook Profile: https://www.facebook.com/Seyed.ali1/posts/3578144268929614
Twitter Profile: https://twitter.com/Magaraja2021/status/1350682966129733633
Facebook Profile: https://www.facebook.com/yuvaraj.ramamurthy.54/posts/2341056312706370
News 18 Tamilnadu: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/23-old-people-dead-after-taking-corona-vaccine-at-norway-srs-394807.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)