Claim: கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். தினமலர் தரப்பு இதை உறுதி செய்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.
கனடாவின் இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளதோடு, கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் “கனடா நாட்டின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் உழைப்பை நம்பியே இருக்கிறது. நடிகர் அக்ஷய் குமாரை முன்னுதாரணமாக கொண்டு பாரத திருநாட்டின் மீது பற்று கொண்ட கனடா வாழ் இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும்” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
Fact Check/Verification
கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக ஜெய்சங்கர் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்தாரா என அறிய அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள், பொது ஊடகங்கள் மற்றும் மத்திய அரசின் செய்தி வெளியீடுகள் போன்றவற்றில் ஆராய்ந்தோம். இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் இதுபோன்ற கருத்தை தெரிவித்ததாக செய்தியோ, பதிவுகளோ நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தினமலரின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் தினமலர் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான தரவுகள் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தினமலர் டிஜிட்டல் துறையை சார்ந்த தண்டபாணியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தினமலர் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!
Conclusion
கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone conversation with Dhandapany, Dinamalar
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)