கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக ஆளும் திமுக அரசு, கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்பட்ட பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் ஆகியவை ஒரு சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கி நகைக்கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்த நிலையில், அதுதொடர்பாக ஆய்வு நடத்தியே கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
இந்த ஆய்வுகளின் முடிவில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பயனர்களுக்கு தள்ளுபடி கிடையாது என்று அறிவித்தது அரசு. இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்களும் சர்ச்சைகளும் நிலவி வருகின்றன.
இந்நிலையில், “கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி ஏற்கனவே சில மாவட்டங்களில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, தள்ளுபடி சாத்தியமில்லை” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 2022 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமைகளில் வரும் மாதத்தின் குறிப்பிட்ட நாட்கள் என்று பரவும் வதந்தி!
Fact check/Verification
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
ஜூனியர் விகடன் தரப்பில் அதுபோன்ற செய்தியுடன் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தபோது வைரல் கார்டுக்கும், உண்மையான ஜூனியர் விகடன் நியூஸ் கார்டுக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான செய்தியில் அமைச்சரின் குறிப்பிட்ட புகைப்படம் வெளியாகியிருந்தது ரிவர்ஸ் இமேஜ் தேடலில் நமக்கு கிடைத்தது.

எனவே, ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரிட்டோவை இதுகுறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது வைரலாகின்ற நியூஸ் கார்டு விகடன் தரப்பில் வெளியிடப்பட்டது இல்லை என்று நமக்கு உறுதி செய்தார். அதுபோன்ற நியூஸ் கார்டினை நாங்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்தார். மேலும், அமைச்சர் தரப்பிலும் குறிப்பிட்ட செய்தி போலியானது என்று நமக்கு உறுதி செய்தனர்.
Conclusion
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Vikatan Editorial Team
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)