திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் குடும்பங்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நியூஸ்கார்டானது பொய்யாக சித்தரிக்கப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து விளக்கி இருந்தோம்.
இதனைத் தொடர்ந்து தற்போது திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் குடும்பங்களுக்கு மட்டும் வரும் 25 ஆம் தேதி முதல் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் பெரியசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் குடும்பங்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அமைச்சர் பெரியசாமி இவ்வாறு கூறினாரா என்பதை உறுதி செய்ய அவரது அதிகாரப் பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும் பொது ஊடகங்களிலும் இதுக்குறித்து தேடினோம். இதில் அமைச்சர் மேற்கண்ட தகவலை கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் தரப்பைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, இத்தகவல் பொய்யானது என உறுதி செய்தனர்.
இதனையடுத்து ஏபிபி நாடு ஊடகத்தின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் ஏபிபி நாடு வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து ஏபிபி நாட்டின் ஆசிரிரை மனோஜ் பிரபாகரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர், ”இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை.” என்று விளக்கமளித்தார்.
Also Read: பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தம்?
Conclusion
திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் குடும்பங்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
ABP Nadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)