Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மருத்துவமனையில் மோசமான நிலையில் உள்ளதாகப் புகைப்படத்தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது.

நடிகர் ரன்பீர் கபூர், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கதாப்பாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் வெளியான ‘83’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது, “எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டார் அந்த கபில், 1980களில் அவரை கடக்காமல் யாரும் சென்றிருக்க முடியாது, இன்றிருக்கும் கிரிக்கெட்டர்களில் யாரும் அவர் அடைந்த புகழில் கால்வாசி கூட வரமுடியாது. இன்று மெலிந்துவிட்ட சிங்கமாக, ஒடுங்கிவிட்ட நதியாக அவர் மருத்துவமனையில் இருப்பது மனதை ரணமாக்கும் காட்சி.எதுதான் இங்கு நிலையானது..? எதுதான் அழியாதது..? எதுதான் மாறாதது என்றால் எதுவுமில்லை.!” என்பதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் கபில்தேவ் மருத்துவமனை ஆடையில் இருப்பது போன்ற புகைப்படத்துடன் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமா இது?
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மெலிந்த உடலுடன் மருத்துவமனையில் மோசமான நிலையில் உள்ளதாகப் பரவுகின்ற புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கபில்தேவ் மருத்துவமனை உடையில் இருக்கும் புகைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு தெரிய வந்தது.
2020 ஆம் ஆண்டு, மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட கபில்தேவ் டெல்லி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு நலமடைந்த கபில்தேவ், அக்டோபர் 25, 2020 அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது, அம்மருத்துவமனையில் கபில்தேவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அதுல் மாத்தூருடன் கபில்தேவ் எடுத்துக்கொண்ட புகைப்படமே தற்போது வைரலாகும் புகைப்படம் என்பது நமக்கு உறுதியானது.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் இருந்து மருத்துவரின் படத்தை நீக்கி விட்டு தற்போது கபில்தேவ் மருத்துவமனையில் மோசமான நிலையில் இருக்கிறார் என்பதான தகவலுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். குறிப்பிட்ட இப்பதிவு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆண்டிலிருந்தே வைரலாகிய நிலையில், தற்போது மீண்டும் அதனைப் பலரும் அவர் மருத்துவமனையில் இருப்பதாக ஷேர் செய்து வருகின்றனர்.
சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய கபில்தேவ் கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் பிறந்தநாளில் கலந்து கொண்ட புகைப்படங்களை Opus India பகிர்ந்திருந்த நிலையில் அதனைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்துள்ளார் கபில் தேவ்.
மேலும், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இந்திய நேரப்படி இன்று, நியூயார்க்கில் நடைபெற்ற 75 years of India’s independence என்கிற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
எனவே, கபில்தேவ் மருத்துவமனையில் மோசமான நிலையில் இருப்பதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி பழையது என்பது உறுதியாகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மெலிந்த உடலுடன் மருத்துவமனையில் மோசமான நிலையில் உள்ளதாகப் பரவுகின்ற புகைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்; சமீபத்திய ஒன்று அல்ல என்பதை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)