கர்நாடகாவில் காவித்துண்டு அணிந்து மாணவர்களுக்கு முன்பாக தைரியமாக அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு நடந்து சென்ற இஸ்லாமிய பெண்ணின் உண்மையான புகைப்படம் என்பதாக புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எனப்படும் ஆடையை அணிவதற்கான தடை தொடர்பாக எழுந்த கலவரம் அங்கு பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
ஹிஜாப் அணிந்த ஒரு பிரிவு மாணவிகளுக்கு எதிராக மற்றொரு பிரிவு மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்த நிலையில் அங்கு சூழ்நிலை பதற்றமாக மாறியுள்ளது. கர்நாடக அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பெங்களூருவில் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் அல்லாஹூ அக்பர் கோஷமிட்ட இளம்பெண், சமூக வலைத்தளங்களில் ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்; டூல்கிட், நேற்று ஜீன்ஸ் இன்று புர்கா என்கிற தகவல்களுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.




சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழகத்திலும் காவிக் கொடியை ஏற்றுவோம் என்றாரா இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்?
Fact Check/Verification
கர்நாடகாவில் காவித்துண்டு அணிந்து மறித்த மாணவர்களுக்கு முன்பாக அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு, ஹிஜாப் அணிந்து சென்ற பெண் இவர்தான் என்று பரவுகின்ற புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கர்நாடக கல்லூரியில் கோஷமிட்ட இளம்பெண்ணின் பெயர் ‘முஷ்கான்’ என்பதாகவே முன்னணி ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. ஓவைசி, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் அவரது பெயரை முஷ்கான் என்றே தெரிவித்துள்ளனர்.
மேலும், வைரலாகும் புகைப்படத்தில் உள்ள இளம்பெண் யார் என்று ரிவர்ஸ் சர்ச் செய்ததில் அவர் கர்நாடகாவைச் சேர்ந்த இளம் சமூகப்போராளி, எழுத்தாளர் மற்றும் ஜனதா தள் கட்சியின் உறுப்பினரான நஜ்மா நசீர் என்பது நமக்குத் தெரிய வந்தது.

மாண்டியா பியு கல்லூரியில் படித்து வருகின்ற முஷ்கான், அவரை கூட்டமாக சூழ்ந்து ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்ட காவித்துண்டு அணிந்த மாணவர்களுக்கு எதிராக அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பிரபலமாகியுள்ளார்.
என்.டி.டி.விக்கு பேட்டியளித்துள்ள முஷ்கான், “நான் எப்போதும் ஹிஜாப் அணிந்தே இருப்பேன் ” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நஜ்மாவின் புகைப்படத்திலிருந்து அவரது முகத்தை மட்டும் எடிட் செய்து, மற்றொரு புகைப்படத்தில் இணைத்து தவறாக பதிவிட்டுள்ளனர். குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, தான்யா ஜெனா என்கிற மாடல் இளம்பெண்ணின் புகைப்படம் என்பது உறுதியானது. அதற்கான ஆதாரங்களையும் இங்கே இணைத்துள்ளோம்.

இதுகுறித்து நியூஸ்செக்கர் சார்பில் நஜ்மா நசீரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “எனது பெயரில் போலியாக இத்தகவல் பரப்பப்படுகிறது. நான் முஷ்கான் இல்லை. ஹிஜாப் தொடர்பாக அவர் குறித்த செய்தி வெளியான பிறகே எனக்கு அவரைத் தெரிய வந்தது. சமூகத்தில் என்னுடைய பிம்பத்தை சிதைக்கவும், என்னுடைய அரசியல் வாழ்க்கையை அழிக்கும் நோக்கிலேயே என்னுடைய புகைப்படங்களை வைத்து தவறான தகவல்கள் சித்தரிக்கப்படுகின்றன. எதை அணிவது எதை அணியக்கூடாது என்பது என்னுடைய உரிமை” என்று தெரிவித்தார்.
Conclusion
கர்நாடகாவில் காவித்துண்டு அணிந்து மறித்த மாணவர்களுக்கு முன்பாக அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு, ஹிஜாப் அணிந்து சென்ற பெண் இவர்தான் என்று பரவுகின்ற புகைப்படம் தவறானது; உண்மையில் அப்புகைப்படத்தில் இருப்பது நஜ்மா நசீர்; நஜ்மா நசீரின் மற்றொரு புகைப்படமும் எடிட் செய்யப்பட்டு வைரலாகிறது; மாண்டியா மாணவியின் பெயர் முஷ்கான் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Najma Nazeer: Twitter/Facebook
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)