Fact Check
பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு அறிஞர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று நழுவினாரா ஈபிஎஸ்?
Claim: பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு அறிஞர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று நழுவினார் ஈபிஎஸ்.
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். 2023 அக்டோபரில் ஆளுநரின் ஆரியம்-திராவிடம் குறித்த பேச்சு குறித்து ஈபிஎஸ் அளித்த பதிலை எடிட் செய்து வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில், உடல் இச்சை ஏற்பட்டால் தாயோ, மகளோ, அல்லது சகோதரிகளிடம் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று பெரியார் கூறியதாக பேசி இருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சீமானின் இக்கருத்து குறித்த கேள்விக்கு, “இதற்கு பதிலளிக்க புராணம் படித்திருக்க வேண்டும். நான் அவ்வளவு படித்தவனல்ல. ஆய்வு செய்தால்தான் இக்கதை உண்மையா பொய்யா என்று தெரிய வரும். அறிஞர்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக லயோலா மணி என்பவர் அறிவிப்பு என்று பரவும் செய்தி உண்மையா?
Fact Check/Verification
பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு அறிஞர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி நழுவியதாக பரப்பப்படும் வீடியோவில் நியூஸ் 18 தமிழ்நாடின் டெம்ப்ளேட் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வீடியோவை வெளியிட்டதா என ஆராய்ந்தோம்.
இத்தேடலில் “”ஆரியம், திராவிடம் இருக்கிறதா, இல்லையா என அறிஞர்கள்தான் கூற வேண்டும், நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல”. ஆளுநரின் கருத்து குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்” என்று குறிப்பிட்டு அக்டோபர் 24, 2023 அன்று நியூஸ் 18 தமிழ்நாடு எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தை காண முடிந்தது.
இவ்வீடியோவின் தொடக்கத்தில் வரும் கேள்விப்பகுதியையும் இடையில் ஆளுநர் ஆய்வு செய்யாமல் கூறுகின்றாரா என்று எழுப்பப்படும் கேள்வியையும் எடிட் செய்தி நீக்கி, இதில் காணப்படும் எழுத்துப் பகுதிகளையும் தேதியையும் மாற்றி வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான வீடியோவையும், எடிட் செய்யப்பட்ட வீடியோவையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
2023 அக்டோபரில் திருச்சியில் நடந்த விழா ஒன்றில், இந்தியாவில் ஆரியம் திராவிடம் என்பதே கிடையாது. இந்தியாவை பிரித்தாள கார்டுவேல் இந்த யுக்தியை உருவாக்கினார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார்.
ஆளுநரின் இக்கருத்து குறித்த கேள்விக்கே மேற்கண்ட பதிலை எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பதில் குறித்த செய்தி நியூஸ் 18 தமிழ்நாடு தவிர்த்து சன் நியூஸ், ABP நாடு உள்ளிட்ட ஊடகங்களிலும் வந்திருப்பதை காண முடிந்தது.
Also Read: ஞானசேகரன் திமுக உறுப்பினர்தான் என்று ஒப்புக்கொண்டாரா ஆர்.எஸ்.பாரதி?
Conclusion
பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு அறிஞர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி நழுவியதாக பரப்பப்படும் வீடியோவானது 2023 ஆம் ஆண்டில் பழனிசாமி பேசிய மற்றொரு வீடியோவை எடிட் செய்து உருவாக்கப்பட்டதாகும்.
இந்தியாவில் ஆரியம் திராவிடம் என்பதே கிடையாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்து குறித்த கேள்விக்கே பழனிசாமி இந்த பதிலை கூறி இருந்தார்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
X post from News 18 Tamilnadu, Dated October 24, 2023
Self Analysis
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்