திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “பசும்பொன்னில் திருநீற்றைக் கீழே கொட்டியது என்னுடைய கொள்கை சம்பந்தப்பட்டது. இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது” என்று கூறியதாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Fact check/Verification
மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்டோபர் 30 ஆம் தேதி, தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்குச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்குத் தரப்பட்ட திருநீறை நெற்றியில் பூசிக் கொள்ளாமல் கீழே வீசினார்.
இது சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினின் இச்செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் “திருநீற்றைக் கீழே கொட்டியது என்னுடைய கொள்கை சம்பந்தப்பட்டது. இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது” என்று மு.கஸ்டாலின் அவர்கள் கூறியதாகக் கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
உண்மையும் பின்னணியும்
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இத்தகவலானது, நியூஸ்7 மற்றும் புதிய தலைமுறை நியூஸ்கார்டுகளைப் பயன்படுத்தி பரப்பப்படுகிறது.
அந்த நியூஸ்கார்டுகளில் பயன்படுத்தப்பட்டப் படங்கள், அதன் எழுத்துறுக்கள் போன்றவற்றைக் காணும்போதே, அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதனை நம்மால் தெளிவாக உணர முடிந்தது.
ஆயினும் இதை உறுதி செய்ய, இவ்வாறு ஒரு செய்தியை நியூஸ் 7 தொலைக்காட்சியும் புதிய தலைமுறையும் வெளியிட்டதா என்பதை முதலில் ஆராய்ந்தோம்.
இதற்காக நியூஸ் 7 மற்றும் புதிய தலைமுறையின் சமூக வலைத்தளப் பக்கங்களான டிவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப் பக்கங்களில் இதுக்குறித்துத் தேடினோம். ஆனால் அவற்றில் இவ்வாறு ஒரு செய்தி வெளியிடப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இந்நிறுவனகளின் இணையத்தளங்களில் இதுக்குறித்தச் செய்தி வந்துள்ளதா என்பதைத் தேடினோம். அவற்றிலும் இவ்வாறு ஒரு செய்தி வந்ததாகத் தெரியவில்லை.
இதன்பின் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தைத் தொடர்புக் கொண்டு இச்செய்திக் குறித்துக் கேட்டோம். அவ்வாறு கேட்டதில்,
“இத்தகவல்கள் முற்றிலும் பொய்யானது”
என்று அவர்கள் பதிலளித்தனர்.
Conclusion
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்துப் பரப்பப்படும் தகவலானது முற்றிலும் பொய்யானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இச்செய்தியினை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: Fabricated
Our Sources
Anna Arivalayam
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)