Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழக சட்டமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான ஆட்சியின் ஐந்தாண்டு காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, வருகின்ற மே மாதம் 24ஆம் தேதியன்று தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் துவங்கிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாண்டுகள் ஆட்சி, வருகின்ற 2021 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிறது.
ஐந்தாண்டுகள் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளும் இப்போதே தங்களது பிரச்சாரக் களங்களில் சுறுசுறுப்பாகிவிட்டன.
மேலும், தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தேர்தல் வேலைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அடுத்தடுத்து அறிவித்தவண்ணம் உள்ளனர். இது தொடர்பான கருத்தரங்குகளும் சூடு பிடித்துள்ளன.
இந்நிலையில், வருகின்ற 24.05.2021 அன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்று செய்தி ஒன்று ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இச்செய்தி பற்றி நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம், 24 ஆம் தேதியன்று நடைபெறுகிறது என்பதாகப் பரவும் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆராய்ந்தோம்.
அதில், சட்டமன்றத் தேர்தல் குறித்த குறிப்பில் வருகின்ற 2021, மே 24ஆம் தேதியுடன் தற்போதைய சட்டமன்றத்தின் ஆட்சிக் காலம் முடிவடைகிறது என்பதையே தேர்தல் ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
கூடவே, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய சட்டமன்றங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது என்பதே அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான அதிகாரிகளின் நியமனம் மற்றும் மாற்றம் குறித்தே அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற இச்செய்திக்கு பலரும் மறுப்பு தெரிவித்து, இதே விளக்கத்தைக் கொடுத்துள்ளதையும் நம்மால் காண முடிந்தது.
தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனங்களும் குறிப்பிட்ட தேதி குறித்து, சட்டமன்றப் பதவிக்காலம் முடிவடையும் நாள் என்றே குறிப்பிட்டுள்ளன.
இதனையே, சமூக வலைத்தளவாசிகள் பலரும் தேர்தல் தேதி என்று தவறாகப் புரிந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம், 24 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானதாகும். தேர்தல் ஆணையம் சட்டமன்றப் பதவிக்காலம் முடிவடையும் தேதி என்றே அதைக் குறிப்பிட்டுள்ளது என்பதையும், அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதையும் நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்கு தெளிவாக விளக்கியுள்ளோம்.
Election Commission of India: https://eci.gov.in/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 24, 2021
Vijayalakshmi Balasubramaniyan
February 24, 2021
Vijayalakshmi Balasubramaniyan
February 27, 2021