Fact Check
ஊட்டி மலை ரயில் தனியார் வசமானதாக வதந்தி
ஊட்டி மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

Fact Check/ Verification
ஊட்டி தமிழகச் சுற்றுலாத் தலங்களில் குறிப்பிடத்தக்கது. அதிலும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி மலைக்குச் செல்லும் நீராவி ரயில் ஊட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது.
கொரானாக் காரணமாக இந்த ரயிலின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த ரயில் சேவை தனியார்க்கு தாரை வார்க்கப்பட்டதாகவும், இந்த ரயிலில் பயணம் செய்ய ரூ.3000 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் செய்தி ஒன்று ஊடகங்களில் வெளி வந்துள்ளது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களும் இதுக்குறித்த ஒரு பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சு.வெங்கடேசன் அவர்களும், ஊடகங்களும் கூறுவதுபோல் உண்மையிலேயே ஊட்டி மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
ஊட்டி ரயில் சேவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து, இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் மத்திய அரசின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கமான, PIB in Tamilnaadu பக்கத்தில், நீலகிரி மலை ரயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாக வெளிவந்த செய்திகளுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறி, ரயில்வே வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தி ஒன்றை இணைத்திருந்ததைக் காண முடிந்தது.
அப்பத்திரிக்கைச் செய்தியில் கூறப்பட்டிருந்தாவது,
“நீலகிரி மலை ரயில் சேவை((Nilgiri Mountain Railway Services) (NMR)) தனியாருக்கு மாற்றப்பட்டு, இச்சேவை வேறு ஒரு பெயரில் இயங்குவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.
இது மூலம் நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புவது என்னவென்றால், நீலகிரி-உதகைமண்டலம் இடையேயான ரயில் சேவையின் பெயரான NMR-ல் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
கடந்த 05.12.2020 மற்றும் 06.12.2020 ஆகிய இரு நாட்களும் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைமண்டலத்துக்கு ரயில் இயக்கப்பட்டது உண்மையே. ஆனால் அது தனியாரால் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட்ட சார்ட்டர் சிறப்பு ரயில் (Charter Special Train) ஆகும்.
இதுப்போன்ற சார்ட்டர் சிறப்பு ரயில் இதற்கு முன்பும் இயக்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் இவ்வகை ரயில்கள் இயக்கப்படும். ஆனால் இந்த சார்ட்டர் ரயில் சேவையானது NMR-ன் வழக்கமான சேவையில் எந்த வித பங்கமும் ஏற்படுத்தாது.
NMR-ன் வழக்கமான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது, பொது மக்களுக்கு உரிய அதிகாரிகள் வாயிலாக தெரிவிக்கப்படும்.”

ரயில்வே நிர்வாகத்தின் பத்திரிக்கைச் செய்தியின் மூலம் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், ஊட்டி மலை ரயில் சேவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக பரவிய செய்தி முற்றிலும் தவறாகும்.
Conclusion
ஊட்டி மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Result: Misleading
Our Sources
Malai Murasu: https://twitter.com/MalaimurasuTv/status/1336169299686301698
Dinakaran: https://twitter.com/dinakaranonline/status/1336163444400168960
Su. Venkatesan MP: https://www.facebook.com/SuVe4Madurai/posts/740637173214579
PIB Tamil Nadu: https://twitter.com/pibchennai/status/1335859180691881984
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)