கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகின்றது.
Fact Check/ Verification
தமிழக சுற்றுலாத் தளங்களில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மிகவும் இன்றியமையாதது. திருக்குறளில் இருக்கும் 133 அதிகாரங்களை குறிப்பிடும் வகையில் 133 அடியில் இச்சிலை உருவாக்கப்படுள்ளது.
இச்சிலையானது கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திமுகவின் சாதனைகளுள் ஒன்றாக இச்சிலைத் திறப்பும் குறிப்பிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கும் திமுகவிற்கும் தொடர்பே இல்லை என்று கூறி பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இப்பதிவுக்கு ஆதாரமாக திருவள்ளுவர் சிலை அடிக்கல் நாட்டு விழாவின் அழைப்பிதழ் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
கலைஞர் கருணாநதி அவர்களுக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் உள்ள ஈர்ப்பு அனைவரும் அறிந்ததே. கலைஞரையும் திருக்குறளையும் பிரிக்கவே முடியாது எனவே கூறலாம்.
அப்படி இருக்க வள்ளுவர் சிலை திறப்புக்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பரவும் தகவல் எவ்வாறு உண்மையாக இருக்க முடியும் எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.
ஆயினும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பதிவில் கூடவே ஒரு அழைப்பிதழும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவர் சிலைக்கு மொரார்ஜி தேசாய் அவர்கள் அடிக்கல் நாட்டவிருப்பதாகவும், எம்,ஜி.ஆர் அவர்கள் திருவள்ளுவர் நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டவிருப்பதாகவும் இருந்தது.

ஆகவே இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து மிகத் தீவிரமாக தேடினோம்.
உண்மை அறிதல்
நம் தேடலில், திருவள்ளுவர் சிலை உருவாக்கத்தின் பின்னணியில் இருந்த வரலாறு குறித்து வீடியோ ஒன்றைக் காண இயன்றது. இவ்வீடியோவை நியூஸ் 7 தமிழ்நாடு தனது யூ டியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
அவ்வீடியோ உங்களுக்காக:
இவ்வீடியோவை முழுமையாக கண்டபின் நமக்கு சில விஷயங்கள் தெளிவாகியது.
- 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி கலைஞர் தலைமையினாலான அமைச்சரவை கூட்டத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- இதன்பின் எம்.ஜீ.ஆர் ஆட்சியில் 15.04.1979 அன்று கன்னியாகுமரியில் மொரார்ஜி தேசாய் அவர்கள் முன்னிலையில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
- 1981 ஜூன் 10 அன்று பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 7 மாதங்களுக்குப் பின் இக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் 75 அடியில் செப்பில் சிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
- 1989 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக 17 மார்ச் 1990 அன்று 75 அடி செப்பு சிலைக்கு பதிலாக 133 அடி கற்சிலை அமைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- சிலை அமைக்கும் பணி 06/06/1990 அன்று கருணாநிதி முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1991 இல் அதிமுக ஆட்சி வந்தவுடன் வள்ளுவர் சிலை அமைக்கும் பணியில் முடக்கம் ஏற்பட்டது. இதன்பின் 1996 ஆம் திமுக ஆட்சிக்கு வந்து இப்பணி மீண்டும் முடிக்கி விடப்பட்டு 19/10/1999-இல் சிலை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
- 01/01/2000 அன்று திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்படி பார்க்கையில் திருவள்ளுவர் சிலை உருவாவதற்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு தெளிவாகிறது.
கன்னியாகுமரியில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் இந்த உண்மையையே நமக்கு எடுத்துரைக்கின்றது.

Conclusion
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Profile: https://twitter.com/annapoorani_2/status/1351544977570992130
Twitter Profile: https://twitter.com/BUSHINDIA/status/1267323030599946241
News 7 Tamil: https://www.youtube.com/watch?v=ONkWiLRDCxo
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)