வாகன ஓட்டுனர்களுக்கு, தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியாக ரூபாய் 1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதற்கு குறிப்பிட்ட ஆவணங்களை பதிவு செய்யவும் என்று கூறி தமிழ்நாடு வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவிப்பு விடுத்துள்ளதாகப் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பலரது வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. முந்தைய அதிமுக தலைமையிலான அரசும், தற்போதைய திமுக தலைமையிலான அரசும் சில நடவடிக்களை எடுத்து வந்தாலும் கூட மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன.
இந்நிலையில், “தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் நிவராணத் தொகையாக ரூ.1000 வழங்கவிருக்கிறது. அதனைப் பெற ஆவணங்கள் ஆதார் அட்டை, பேங்க் பாஸ்புக், ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணத்தொகை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது” என்பதாக தமிழ்நாடு ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/Verification:
வாகன ஓட்டுனர்களுக்கு, நிவாரண நிதியாக தமிழக அரசின் சார்பில் ரூ.1000 வழங்கப்பட இருப்பதாக தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு குறித்த உண்மையறிய முதலில் அரசு சார்பில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தோம்.
அப்போது, கடந்த முதல் அலையின்போது மார்ச் 24, 2020 அன்று சட்டமன்றத்தில் நிவாரண அறிவிப்புகளை வெளியிட்ட அன்றைய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா 1,000 ரூபாயும் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
வாகன ஓட்டுனர்களுக்கான நிவாரணம் குறித்த பொதுவான அறிவிப்பாக அது இல்லை. ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்த அறிவிப்பாக மட்டுமே அது செய்தித்தாள்களில் வந்திருந்தது.

ஆனால், குறிப்பிட்ட அந்த சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டதற்கான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும், தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு உண்மையா என்பது குறித்து ஆராய்ந்தபோது TNDWWA வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர், பேஸ்புக் பக்கத்தில் மேற்கண்ட அந்த நிவாரண நிதி குறித்த போஸ்டர் அறிவிப்பு போலியானது என்று அந்த அமைப்பின் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க துணைத்தலைவரான மாதேஸ்வரனிடம் கேட்டபோது, குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படம் தவறுதலாக வைரல் செய்யப்படுவதாகவும், அதுபோன்ற போஸ்டர்கள் எதையும் TNDWWA சார்பில் வெளியிடவில்லை என்றும் நமக்கு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்த மறுப்பினை சமூக வலைத்தளப்பக்கங்களிலும் அவர்கள் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
வாகன ஓட்டுனர்களுக்கு, நிவாரண நிதியாக தமிழக அரசின் சார்பில் ரூ.1000 வழங்கப்பட இருப்பதாக தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு என்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Twitter:https://twitter.com/tndwwa/status/1404852424360140805/photo/1
Facebook:https://www.facebook.com/tndwwa/posts/310014854174133
TNDWWA Official
Dinakaran: https://www.dinakaran.com/News_detail.asp?Nid=574284
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)