சூரியப்புயலால் உலகமே கிட்டதட்ட ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப்போவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக செய்தி ஒன்று ஷேர் சாட், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact Check/Verification:
உலகிற்கே ஒளி கொடுக்கும் வள்ளலாக விளங்கி வருகின்ற மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன். எப்பொழுதுமே அதிக வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டே இருப்பதால்தான் உலகிற்கு சூரிய வெளிச்சம் என்பது தடையின்றிக் கிடைக்கிறது.
இந்நிலையில், சூரியனில் மிகப்பெரிய புயல் ஒன்று வீசப்போவதாகவும் இதனால் அதனைச் சுற்றிச் சுழலும் மற்ற கிரகங்களிலும் பாதிப்பு நிகழப்போவதாகவும் பத்திரிக்கைச் செய்தி போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் புயல் புவிக்கும் ஆபத்தினை ஏற்படுத்தவிருப்பதாகவும், இதனால் டிசம்பர் 16ம் தேதி துவங்கி 22ம் தேதி வரையில் உலகமே இருளில் மூழ்கப்போவதாகவும், அதை நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது அந்த புகைப்படச் செய்தி.
சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
உண்மையும் பின்னணியும்:
சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய அப்புகைப்படம் தொடர்பான முக்கிய வார்த்தைகளான நாசா, சூரியப்புயல், இருள், டிசம்பர் ஆறு நாட்கள் உள்ளிட்டவற்றால் இணையதளங்களில் ஆராய்ந்தோம்.
அப்பொழுதுதான் இந்த செய்தியானது கடந்த சில வருடங்களாகவே அடிக்கடி இப்படிப் பகிரப்படுவது நமக்குத் தெரிய வந்தது. 2012 துவங்கி 2019 வரையிலும் பலரும் இது குறித்த ட்விட்களை பகிர்ந்துள்ளனர்.
மேலும், இணையதளத்தில் இதுகுறித்து ஆராய்ந்தபோது விகடன் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரை நமக்குக் கிடைத்தது. 2014ம் ஆண்டில் வெளியான அக்கட்டுரையும் இதே போலிப் பரவல் குறித்த விளக்கக் கட்டுரையாகும். அதன் இணைப்பை நாங்கள் இணைத்துள்ளோம்.
மேலும், 2018ம் ஆண்டு தி பிரிண்ட் வெளியிட்ட ஒரு கட்டுரையும் இது தவறான தகவல் என்பதை ஆமோதிக்கிறது.
மேலும், நாசாவின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் சென்று ‘டிசம்பர்’ என்கிற ஆங்கில வார்த்தையில் தேடிய போது உலகத்தை டிசம்பரில் இருள் சூழும் என்று வெளியாகும் தகவல் போலியானது என்கிற அவர்களது கட்டுரையை நம்மால் காண முடிகிறது.

எனவே, டிசம்பரில் ஆறு நாட்கள் சூரியப்புயல் வீசுவதால் உலகமே இருளில் மூழ்கும் என்று பரவும் செய்தி தவறானது என்பது நமக்குத் தெரிய வருகிறது.
Conclusion:
சூரியப்புயலால் உலகமே டிசம்பர் 16 துவங்கி 22 வரையில் இருளில் மூழ்கும் என்று பரவும் புகைப்படத்தகவல் போலியானது; ஏற்கனவே பல ஆண்டுகளாக பரவுகிறது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை நம்பி அச்சப்பட வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: Fabricated
Our Sources:
NASA: https://www.nasa.gov/topics/earth/features/2012.html
Vikatan: https://www.vikatan.com/news/miscellaneous/34482-
The Print: https://theprint.in/report/whatsapp-speculation-about-solar-storm-is-just-that-speculation/42760/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)