Fact Check
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பின்னால் சர்ச்சைக்குரிய தலைப்பில் புத்தகமா?
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பின்புறம் “இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவது எப்படி?” என்கிற புத்தகம் இருந்ததாகவும் ஏசுவின் சிலை ஒன்று இடம் பெற்றிருந்ததாகவும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டது. எனினும், தமிழகத்தில் பெரும்பான்மையைப் பெற்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், கொரோனாவின் கோரத்தாண்டவத்துடன், கருப்புப் பூஞ்சை தொற்றும் பரவி வருகின்ற நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், சோனியா காந்தி அமர்ந்து உரையாடுகின்ற ஒரு புகைப்படத்தின் பின்புறம் “இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவது எப்படி?” என்கிற புகைப்படமும், ஏசு கிறிஸ்துவின் சிலை ஒன்றும் இடம் பெற்றுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றில் அவருக்கு பின்புறம் உள்ள ஷெல்பில் “இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவது எப்படி?” என்கிற புத்தகம் இருந்ததாகப் பரவுகின்ற புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கிய போது, கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று NDTVயும், மேலும் முன்னணி செய்தித்தளங்கள் பலவும் சோனியா காந்தியின் இப்புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளது நமக்குத் தெரிய வந்தது. குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் “How to convert india into christian nation” என்கிற புத்தகமோ, ஏசு கிறிஸ்துவின் சிலையோ இடம்பெறவில்லை.


மேலும், குறிப்பிட்ட அந்த புகைப்படம் குறித்த ஆய்வில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டதும் நமக்குத் தெரிய வந்தது.
அந்த வீடியோவில், பீகார் மாநில மக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்டோபர் 27, 2020 அன்று உரையாற்றியுள்ளார். எனவே, குறிப்பிட்ட அப்புகைப்படத்தின் பின்புறம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
Conclusion:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பின்புறம் “இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவது எப்படி?” என்கிற புத்தகம் இருந்ததாகவும் ஏசுவின் சிலை ஒன்று இடம் பெற்றிருந்ததாகவும் பரவும் புகைப்படம் தவறானது: எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Manipulated Media
Our Sources
NDTV: https://www.ndtv.com/india-news/hope-gloom-of-pandemic-ends-this-diwali-says-sonia-gandhi-2325239
Congress party: https://youtu.be/lwPtd1kQa9E
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)