தஞ்சை பெரிய கோயிலுக்கு எதற்கு பராமரிப்பு செலவு என்று நடிகை ஜோதிகா கேள்வி எழுப்பியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள தொல்காப்பியர் சுற்றுச்சூழல் பூங்காவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இம்மாத தொடக்கத்தில் (ஜூலை 2 ஆம் தேதி) ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பக்கிங்ஹம் கால்வாய், எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் ஆகிய பகுதிகளில் சுமார் 2500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அமைச்சர் கூறிய இவ்விஷயம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கூறிய இந்த புதிய திட்டத்தை விமர்சிப்பதோடு மட்டுமில்லாமல், இத்திட்டதை குறித்து யாரும் பேச மாட்டார்கள் என்று பிரபலங்கள் சிலரையும் வம்பிழுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நெட்டிசன்கள் இவ்வாறு வம்பிழுக்கும் பிரபலங்களில் நடிகை ஜோதிகாவும் ஒருவர். “தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு செலவு எதற்கு என்று கேள்வி எழுப்பிய ஜோதிகா, சென்னையில் ரூ.2,500 கோடியில்
நான்கு புதிய பூங்காக்கள் அமைக்கவிருப்பதை கேள்வி எழுப்ப மாட்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



நெட்டிசன்கள் கூறுவதுபோல் உண்மையாகவே ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் குறித்து பேசினாரா என்பதை அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே விலகுவேன் என்றாரா சூர்யா?
Fact Check/Verification
தஞ்சை பெரிய கோயில் குறித்து ஜோதிகா தவறாகப் பேசிவிட்டார், அதன் பராமரிப்பு செலவு குறித்து தவறாக பேசிவிட்டார் என பரப்படும் இத்தகவல்கள் கடந்த 2020 ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
உண்மையில் ஜோதிகா மேற்குறிப்பிட்டவாறு பேசினாரா என்பதை அறிய இந்த சர்ச்சைக்கு அடிப்படையாக விளங்கிய விருது விழாவின் வீடியோவை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அந்த விழாவில் ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் குறித்தோ, அக்கோயிலுக்கு செலவிடப்படும் பராமரிப்பு செலவு குறித்தோ தவறாகப் பேசியுள்ளாரா என்பதை ஆய்வு செய்தோம்.
அதில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் குறித்து தவறாகவோ, அல்லது அதற்கு செலவு செய்யாதீர்கள் என்றோ எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது நமக்கு தெளிவாகியது.
உண்மையில் அவ்விழாவில் ஜோதிகா பேசியதாவது,
“ராட்சசி படத்துக்காக எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அதனால் இந்த தகவலை நான் கண்டிப்பாக பகிர்ந்துகொள்ள வேண்டும். தஞ்சாவூர் போனபோது எல்லோரும் தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தீர்களா? பிரகதீஷ்வரா கோவில், அது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், அதை பார்க்காமல் போகாதீர்கள் என்றார்கள்.
அந்த கோவில் அவ்வளவு அழகாக இருக்கின்றது. கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார்கள். ஏற்கனவே அதை நான் பார்த்திருக்கிறேன். அவ்வளவு அழகாக இருக்கிறது. உதய்பூரில் இருக்கும் அரண்மனைகளை பராமரிப்பது போல அழகாக பராமரிக்கிறார்கள்.
அதற்கு அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு ஒரு அரசு மருத்துவமனையில் நடந்தது. மிக மோசமாக பராமரிக்கப்பட்டிருந்தது. அங்கு பார்த்ததை எல்லாம் என் வாயால் சொல்ல முடியாது. ஒரு வேண்டுகோள், ராட்சசியில் கூட இதை சொல்லியிருக்கிறேன். கௌதம் (ராட்சசி படத்தின் இயக்குநர்) சொல்லியிருக்கிறார்.
கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீர்கள், செலவு செய்கிறீர்கள். வண்ணம் அடிக்கிறீர்கள், பராமரிப்பு செய்கிறீர்கள், கோவில் உண்டியலில் பணம் போடுகிறீர்கள். தயவு செய்து அதே அளவு பணத்தை அரசு கட்டிடங்களுக்கும் செலவு செய்யுங்கள், பள்ளிகளுக்கு கொடுங்கள், அரசு மருத்துவமனைக்கு கொடுங்கள். இது மிகவும் முக்கியமானது. மருத்துவமனைகள் மிகவும் முக்கியமானது, பள்ளிகள் மிகவும் முக்கியமானது.
Conclusion
தஞ்சை பெரிய கோயிலுக்கு எதற்கு பராமரிப்பு செலவு என்று நடிகை ஜோதிகா கேள்வி எழுப்பியதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
JFW: https://www.youtube.com/watch?v=g57mOmGHR0k
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)