கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடைப்பெற்றது. இதில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப் பெற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வென்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தாலும், தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் கோயம்புத்தூரில் திமுக கூட்டணியால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.
இந்த விஷயமானது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மக்களை கிண்டல் செய்யுமாறு பல மீம்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.
இதற்கு எதிர் வினை ஆற்றும் வகையில் சென்னை மக்கள் குறித்து கோயம்புத்தூர் மக்களும் தங்கள் கருத்துகளை மீம்கள் வாயிலாகவும், பதிவுகள் வாயிலாகவும் வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ,கோயம்புத்தூர் ஒரு புறமும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் அதற்கு எதிராக மறுபுறமும் இருப்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை சிலர் ஏற்படுத்த முயன்று வருவதை நம்மால் காண முடிகின்றது.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசுக்கு கொரானா இரண்டாம் அலை காரணமாக ஆரம்பமே மிக சவாலாக உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை தடுப்பூசி பற்றாக்குறை என அடுக்கடுக்கான பல சவால்களை சரிசெய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
நிலைமை இவ்வாறு இருக்க, கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் மோடியிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள் பேசியதாக காண்டீபம் எனும் ஆன்லைன் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

Archive Link: https://archive.ph/PEdpn
இந்த செய்தியினை பலரும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/f9d3b

Archive Link: https://archive.ph/FtPob
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் மோடியிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள் பேசியதாக செய்தி பரவியதை தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு அவர் பேசினாரா, அவ்வாறு பேசி இருந்தால், எங்கே? எந்த சந்தர்பத்தில் இவ்வாறு பேசினார் என்பதையெல்லாம் குறித்து அறிய, இவைகள் குறித்து ஆய்வு செய்தோம்.
நம் ஆய்வில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள் சமீபத்தில் தந்தி தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் என்பதும், அந்நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துக்களே தவறான பொருள்படும்படி திரித்து பரப்பப்படுகின்றது என்பதும் தெரிய வந்தது.
இந்த விவாத நிகழ்ச்சியில் கொரானா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில், “மத்திய அரசு தந்த 11 இலட்சம் தடுப்பூசியை மாநில அரசு பயன்படுத்தாமல் உள்ளது என்று பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார்.
இதற்கு, மத்திய அரசு அளித்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்காக மாநில அரசு உரிய முகாம்களுக்கு அனுப்பியுள்ளதாக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பதிலளித்தார்.
இதன்பின் கோயம்புத்தூரில் மக்கள் கதறுகின்றார்கள் என்று கே.டி.ராகவன் கூற, கோயம்புத்தூரில் மக்கள் கதறினால், அதை மோடிக்கு தெரியப்படுத்துங்கள், நீங்கள் செய்ய வேண்டியதை சரியாக செய்யாததால்தான் இந்த நிலைமை வந்தது என்று பதிலளித்தார்.
கான்ஸ்டன்டன் ரவீந்திரனின் இந்த பதிலே தவறான பொருள்படும்படி திரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
நம் ஆய்வில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், கோயம்புத்தூர் மக்கள் கஷ்டங்களை பாரதப் பிரதமருக்கு தெரியப்படுத்துங்கள் என்று கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறிய கருத்தை, கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் நேரடியாக மோடியிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியதாக திரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
Conclusion
கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misplaced Context
Our Sources
Thanthi TV: https://www.youtube.com/watch?v=VSlUK1I3YaU&list=PL1SgYOQ8uzMTDGjxH99rA-6sHzYhcTPn3&index=8
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ok thank you..
I’m save this whatsapp number and mail id