போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்று சாணக்ய நீதி கூறுகிறது என்று அமித்ஷா கூறியதாக பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதியன்று 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஏப்ரல் 4 ஆம் தேதியன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரக் களம் முடிவடைய இருக்கின்ற நிலையில், கடைசிகட்ட பிரச்சாரக்களத்தில் கட்சிகள் மும்முரமாக இருக்கின்றன.
நேரடி தேர்தல் பிரச்சாரக் களம் ஓய்ந்தாலும், சமூக வலைத்தளங்களில் வதந்திகளால் செய்யப்படும் பிரச்சாரக் களம் ஓய்வடைய வாய்ப்பில்லை என்பதற்கேற்ப பல்வேறு வதந்தி புகைப்படங்களும், தவறான தகவல்களும் பரவி வருகின்றன.
அவ்வகையில், “போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி – அமித் ஷா சர்ச்சை பேச்சு” என்கிற வாசகங்கள் அடங்கிய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Archived Link: https://archive.ph/7W7ms#selection-2997.0-2997.82
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
போரில் வெற்று பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி என்று அமித்ஷா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதில், கடந்த 2019 ஆம் ஆண்டே இந்த குறிப்பிட்ட நியூஸ் கார்டு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது நமக்குத் தெரிய வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 16 ஆம் தேதியன்று காஷ்மீர் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் வாகனம் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்ற காலகட்டத்தில் இந்த புகைப்படம் பரவியுள்ளது.

Archived Link: https://archive.ph/vNQOM
குறிப்பிட்ட அந்த புகைப்படம் மீண்டும் வைரலாவதைத் தொடர்ந்து அதுகுறித்து நியூஸ் 7 செய்தியாளரிடம் கேட்டபோது அவர், “இது பழமையான வடிவமைப்பு; 2019க்கு முன்பிருந்தே இதனை நாங்கள் பயன்படுத்துவதில்லை. குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு போலியாக வடிவமைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் தற்போது வைரலாகிறது” என்று கூறினார். இதனடிப்படையில், குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு போலியானது என்பது நமக்குத் தெரிய வந்தது.
Conclusion:
போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி என்று அமித் ஷா சர்ச்சை பேச்சு எனப் பரவும் புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
News 7 Tamil
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)