Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பஹ்ரைச் கலவரத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் பகுதியை சார்ந்த வீடுகளை இடித்தது உ.பி. அரசு.
Fact: பஹ்ரைச் கலவரத்திற்கும் வைரலாகும் வீடியோவிற்கும் எவ்வித தொடர்புமில்லை. சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதாக பஹ்ரைச் போலீசார் தெளிவு செய்துள்ளனர்.
“பாலஸ்தீனமோ, அல்லது லெபனானோ இல்லை. இது உத்திரபிரதேசம் (பஹ்ரைச்). உ.பி.மாநிலம் பஹ்ரைச்சில் தசரா ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் முன் வேண்டுமென்றே ஒலிக்கப்பட்ட மத வன்மத்தை தூண்டிய பாடலால் ஏற்பட்ட வன்முறையை அடுத்து எழுந்த கலவரத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லீம் பகுதியை சார்ந்த வீடுகளை உ.பி அயோக்கிய அரசாங்கம் புல்டோசரை வைத்து இடித்துள்ளது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று கூறினாரா ஆளுநர்?
உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் உள்ள மஹராஜ்கஞ்சில் அக்டோபர் 13 அன்று துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் பகுதியை சார்ந்த வீடுகள் உத்திரப்பிரதேச அரசு புல்டோசரால் இடித்ததாக வீடியோத்தகவல் பரவி வருகின்றது. இதுக்குறித்த உண்மையை அறிய வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் ‘@altaf.studio’ எனும் பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பஹ்ரைச்சில் உள்ள வஜிர்கஞ்சில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் இவ்வீடியோ பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 26, 2024 அன்று இவ்வீடியோ பகிரப்பட்டிருந்தது.
இதை அடிப்படையாக வைத்து இணையத்தில் தேடியதில் ஃபகர்பூருக்கு உட்பட்ட சரை ஜக்னா கிராம பஞ்சாயத்தின் வஜீர்கஞ்ச் மார்க்கெட்டில் நீதிமன்ற உத்தரவின்பேரில் 23 வீடுகள் இடிக்கப்பட்டதாக அமர் உஜாலா செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியானது செப்டம்பர் 25, 2024 அன்று வெளியிடப்பட்டிருந்தது. பயிர் பாதுகாப்பு கூடம் மற்றும் சாலை அமைப்பதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பிளாட் எண் 92, 211 மற்றும் 212 நிலங்கள் இருந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் ஹிந்துஸ்தான் டைம்ஸிலும் இதுக்குறித்த செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் கைசர்கஞ்ச் துணை டிவிஷ்னல் மாஜிஸ்ட்ரேட் ஆலோக் குமார் இச்சம்பவம் குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “சரை ஜக்னா கிராமத்தில் கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில் 23 வீடுகள் கட்டப்பட்டிருந்தது. சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்ய ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் 23 வீடுகளும் இடிக்கப்பட்டது”.
இதனையடுத்து தேடுகையில் பஹ்ரைச் போலீஸாரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் வீடியோ குறித்து தெளிவுப்படுத்தி பதிவு ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
அப்பதிவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு ஃபரக்பூர் பகுதியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் செப்டம்பர் 25 அன்று ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிகழ்வு என்றும், அதற்கும் அண்மையில் (அக்டோபர் 13) மஹாராஜ்கஞ்சில் நடந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பஹ்ரைச் கலவரத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் பகுதியை சார்ந்த வீடுகளை உ.பி. அரசு புல்டோசரால் இடித்ததாக பரவும் தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு பஹ்ரைச் வன்முறை சம்பவம் நடப்பதற்கு 18 நாட்களுக்கு முன்பே நடந்ததாகும். சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட வீடுகள் அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Instagram Post By @altaf.studio, Dated September 26, 2024
X Post By @bahraichpolice, Dated October 19, 2024
இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Vasudha Beri
March 19, 2025
Ramkumar Kaliamurthy
February 13, 2025
Ramkumar Kaliamurthy
March 12, 2024