Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: மும்பையில் பாரத் மாதா கி ஜெய் என்று முழங்கிய முதியவரை இஸ்லாமியர்கள் தாக்கினர்.
Fact: இத்தகவல் தவறானதாகும். முதியவரை தாக்கியவர்களுள் இந்து, முஸ்லீம் என இரு மதத்தை சார்வர்களும் இருந்துள்ளனர். முன்பகை காரணமாகவே இந்த வன்முறை நடந்துள்ளது.
“*இந்தியா தாய்க்கு ஜெய் சொல்ல முடியாத சூழ்நிலை* மும்பை பிண்டி பஜாரில் நடந்த சம்பவம். இந்தியாவில் ஜிகாதி முஸ்லீம் படையெடுப்பாளர்களின் பகுதிகளில் *பாரத் மாதா கி ஜெய்* நிலை இதுதான். இது இஸ்லாமிய நாடு இல்லை…இந்தியாவில் ஒரு முதியவரின் நிலை இதுதான்” என குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?
மும்பையில் பாரத் மாதா கி ஜெய் என்று முழங்கிய முதியவரை இஸ்லாமியர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் பாஜக தேசியச் செயலாளர் மஜிந்தர் சிங் சிர்ஸா அக்டோபர் 19, 2019 அன்று வைரலாகும் இவ்வீடியோவின் முழுப்பகுதியை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
மஜிந்தர் சிங் சிர்ஸா இப்பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது, “ராஜஸ்தானின் பில்வாரா நகரத்தில் உள்ள ஆசாத் சவுக் மார்க்கெட்டில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். ஒரு சிறிய பிரச்சனைக்காக அம்முதியவரை தாக்கியவர்கள் பெரும் தவறு செய்துள்ளனர். இந்த குற்றத்தை செய்த அந்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்களை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் காவல்துறையை வேண்டிக்கொள்கிறேன்”.
தொடர்ந்து தேடுகையில் மஜிந்தர் சிங் சிர்ஸா இந்த வழக்கு தொடர்பான விவரங்களை அக்டோபர் 21, 2019 அன்று அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
அவர் பகிர்ந்திருந்த அறிக்கை வாயிலாக நமக்கு தெரிய வந்தது யாதெனில், வீடியோவில் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் பெயர் ஹோச்சந்த் சிந்தி என்பதாகும். இவர் சாலையில் செல்பவர்களை தகாத முறையில் பேசுவதை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இவர் சற்று மனநிலை சரியில்லாதராக இருந்துள்ளார். இவர் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். இந்த தாக்குதல் நடந்தப்பின் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அச்சோதனையில் அவருக்கு உடலில் எவ்வித அடியும் ஏற்படவில்லை. மூன்று இடங்களில் வலி மட்டுமே இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுத்தவிர்த்து ஹோச்சந்தை தாக்கியவர்கள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுள் மன்சூர், இர்ஃபான் ஆகிய இருவர் மட்டுமே இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களாவர். மனோஜ், ஹேமந்த், பகவான் தாஸ் ஆகிய மற்ற மூவரும் இந்து மதத்தை சார்ந்தவர்களாவர்.
இதுத்தவிர்த்து இந்த அறிக்கையில் பாரத் மாதா கீ ஜெய் என்று கூறியதால் அம்முதியவர் தாக்கப்பட்டதாக எந்த ஒரு இடத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து மஜிந்தர் அளித்த அறிக்கையை அடிப்படையாக வைத்து தேடியதில் அடிப்பட்ட அம்முதியவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை நமக்கு கிடைத்தது.
இந்த புகாரில் குற்றவாளிகள் அம்முதியவரிடம் பணம் கேட்டதாகவும், அதை அவர் தர மறுத்ததால் அவர்கள் கடும் ஆயுதங்களால் அம்முதியவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரிலும் பாரத் மாதா கீ ஜெய் என்று கூறியதால் முதியவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து பில்வாரா காவல் நிலைய அதிகாரியை நியூஸ்செக்கர் வழியாக தொடர்புக்கொண்டு வைரலாகும் வீடியோ குறித்து விசாரித்தோம். அவர் இந்த சம்பவம் அக்டோபர் 15, 2019 அன்று நடந்தது என்றும், அம்முதியவரின் மகன் சோனு ஜித்தேனி இச்சம்பவம் குறித்து குறித்து புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
அம்முதியவர் ஹோச்சந்த் சற்று மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சம்பவ தினத்தன்று மார்க்கெட்டில் கடை வைத்திருந்த மற்றவர்களை தகாத வார்த்தையில் அம்முதியவர் பேசியதாகவும், ஏற்கனவே அவருடன் முன்விரோதத்தில் இருந்த கடைகாரர்கள் இது தொடர்பாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் நமக்கு தெளிவாகுவது யாதெனில்,
Also Read: தமிழகத்தில் காவல்துறையின் நிலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
மும்பையில் பாரத் மாதா கி ஜெய் என்று முழங்கிய முதியவரை இஸ்லாமியர்கள் தாக்கியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். அம்முதியவரை அடித்தவர்களுள் இந்து, முஸ்லீம் என இரு மதத்தை சார்வர்களும் இருந்துள்ளனர். முன்பகை காரணமாகவே இந்த வன்முறை நடந்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook post by Majinder Singh Sirsa on October 19, 2019
Tweet by Majinder Singh Sirsa on October 21, 2019
Conversation with SHO Bhilawada Police Station
First Information Report
(இந்த செய்தியானது ஏற்கனவே பிரசாத் பிரபுவால் ஆய்வு செய்யப்பட்டு நவம்பர் 02, 2023 அன்று நியூஸ்செக்கர் மராத்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 18, 2025
Ramkumar Kaliamurthy
May 5, 2025
Ramkumar Kaliamurthy
December 18, 2024