தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக அஇஅதிமுக என்கிற பேரியக்கம் படுதோல்வி அடைந்திருப்பதற்கு தகுதியற்ற தலைமையே காரணம் என்று முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக ஏபிபி நாட்டின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



Also Read: மதுவந்தி வீடியோ குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்தாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று சி.வி.சண்முகம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
சி.வி.சண்முகம் அவர்கள் நேற்று (17.10.2021) விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சி.வி. சண்முகம் பேசும்போது, “இந்த இயக்கம் 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில், அதிமுக என்ற இந்த மாபெரும் இயக்கம் பல வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது. அரசியல் வரலாற்றில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். 2021 தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. அதேபோல் கடந்த 1996ஆம் ஆண்டு சந்தித்த தேர்தலில் அதிமுக படுதோல்வியைத் தழுவியது. ஆனால், மீண்டும் எழுந்து வந்த பெருமை நமது கட்சிக்கும் மறைந்த ஜெயலலிதாவுக்கும், இயக்கத்தில் உள்ள நமது தொண்டர்களுக்கும் சேரும். இந்த தோல்வி நிரந்தரம் இல்லை.” என்று பேசியுள்ளதை நம்மால் காண முடிந்தது.
சி.வி.சண்முகத்தின் மேற்கண்ட பேச்சும் வைரலாகும் நியூஸ்கார்டில் உள்ள தகவலும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணாக உள்ளது. ஆகவே உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை ஏபிபி வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏபிபி நாட்டின் ஆசிரியரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம்.
அதற்கு அவர்,
“இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட்”
என்று நமக்கு விளக்கமளித்தார்.
Conclusion
தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
ABP Naadu’s Editor’s Testimonial
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)