Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்வர் NT ராமராவ் அவர்கள் கட்சி ஆரம்பித்து மூன்றாவது மாதத்தில் ஆட்சியை பிடித்தார் என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் கூறியதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம். ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் தனிக்கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தார்.
ஆனால் எப்போது கட்சியை ஆரம்பிக்கவிருக்கிறார், கட்சியின் பெயர் என்ன போன்ற தகவல்களை அப்போது தெரிவிக்கவில்லை.
இதோ ஆரம்பிப்பார், இப்போது ஆரம்பிப்பார் என்று அவரின் ரசிகர்கள் தொடர்ந்து காத்திருந்த நிலையில், ஒரு வழியாக கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வரும் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாகவும், இதுக்குறித்த அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் அவர்கள் அறிவித்தார்.
இதன்பின் சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்வு குறித்து நேர்மறையாவும், எதிர்மறையாகவும் தங்கள் கருத்துகளைப் பலரும் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், குறுகிய காலத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி இருப்பது குறித்த கேள்விக்கு, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அவர்கள், NT ராமராவ் அவர்கள் கட்சி ஆரம்பித்து மூன்றாவது மாதத்தில் ஆட்சியை பிடித்தார் என்று பதிலளித்ததாக நியூஸ் 7 தமிழ் புகைப்படச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இச்செய்தியை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
நியூஸ் 7 செய்தி வெளியிட்டதைப்போல், NT ராமராவ் குறித்து குருமூர்த்தி அவர்கள் பேசினாரா என்பதை அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இதை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
NT ராமராவ் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியை 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்தார். இதன்பின் ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் தீவிர பிரச்சாரம் செய்தார்.
இதன்பின் 1983 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, ஆந்திராவின் 294 தொகுதிகளில் 202 தொகுதிகளை வென்று, 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
ஆனால் வெறும் மூன்று மாதங்களில் NT ராமராவ் ஆட்சியைப் பிடித்தார் என்று குருமூர்த்தி அவர்கள் கூறியதாக நியூஸ் 7 தமிழ், செய்தி வெளியிட்டுள்ளது.
NT ராமராவ் அவர்கள் மூன்று மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார் எனும் கூற்று முற்றிலும் தவறானது என்பது நமக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் இக்கூற்றை நிஜமாகவே குருமூர்த்தி அவர்கள் கூறினாரா என்பதை அறிய இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
ஆய்வின் முதற்படியாக, குருமூர்த்தி அவர்கள் இவ்வாறு கூறியதாக, நியூஸ் 7 தவிர்த்து மற்ற ஊடகங்களில் வந்துள்ளதா என்பதை ஆராய்ந்தோம்.
ஆனால் நியூஸ் 7 தவிர்த்து மற்ற ஊடகங்களில் இச்செய்தி வந்ததற்கான எந்த ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.
ஒருவேளை நியூஸ் 7க்கு குருமூர்த்தி அவர்கள் பிரத்தியேகமாக பேட்டி கொடுத்துள்ளாரா, அப்போது இதுபோன்று ஏதாவது ஒரு கூற்றை கூறினாரா என்பதை அறிய, நியூஸ் 7 தொலைக்காட்சியின் இணையத்தளம், யூ டியூப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.
ஆனால் அவற்றில் இந்நிகழ்வு குறித்த எந்த செய்தியும் நமக்கு தென்படவில்லை.
இதன்மூலம் நியூஸ் 7 தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் மட்டும் இத்தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிந்தது.
இதன்பின் குருமூர்த்தி அவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, நியூஸ் 7 தமிழில் இந்த செய்தி வந்த தினத்தில் (டிசம்பர் 3), வேறு எங்கேயாவது பேசியுள்ளாரா என்பதை ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில், “இந்தியா டுடே” தொலைக்காட்சிக்கு குருமூர்த்தி அவர்கள் தொலைபேசி பேட்டி ஒன்று கொடுத்திருந்ததை நம்மால் காண முடிந்தது.
அப்பேட்டியில், “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கும்பட்சத்தில், ரஜினிகாந்த் அவர்களுக்கு களப்பணி செய்ய இது போதுமான நேரமாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது (ஏறக்குறைய மூன்றாவது நிமிடத்தில்).
இக்கேள்விக்கு பதிலளிக்கும்போது,
“NT ராமராவ் அவர்கள் கட்சி ஆரம்பித்து 8-9 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார்.
இத்தோடு ஒப்பிட்டு பார்க்கையில், ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் இயக்கம் என்ற பெயரில் களப்பணி ஆற்றி வருகிறார். ஆகவே ரஜினிகாந்தால் நிச்சயம் சாதிக்க முடியும்.”
என்று குருமூர்த்தி அவர்கள் கூறி இருப்பதை நம்மால் காண முடிந்தது.
அப்பேட்டி உங்களுக்காக:
இப்பேட்டியின்படி பார்க்கையில், NT ராமராவ் அவர்கள் கட்சி ஆரம்பித்து மூன்றாவது மாதத்தில் ஆட்சியை பிடித்தார் என்று குருமூர்த்தி அவர்கள் கூறியதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தி தவறானது என்பது நமக்கு தெளிவாகிறது.
NT ராமராவ் அவர்கள் கட்சி ஆரம்பித்து மூன்றாவது மாதத்தில் ஆட்சியை பிடித்தார் என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் கூறியதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட புகைப்படச் செய்தியானது முற்றிலும் தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1334495321993306112
India Today: https://www.youtube.com/watch?v=–hcfGkfqP0
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
October 11, 2024
Ramkumar Kaliamurthy
July 8, 2024
Ramkumar Kaliamurthy
August 23, 2023