ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடிந்து அறிக்கை ஒன்றை விடுத்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

Fact Check/ Verification
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமே பரபரப்பாக உள்ளது.
இந்த பொதுத் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்த மிகப்பெரிய விஷயம் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை. ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்து விட்டார்.
இதற்கு காரணமாக தன் உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார் ரஜினிகாந்த். ஆனால் இம்முடிவை ரசிகர்கள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இவர்கள் சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்கள் அவரது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி நிகழ்வு ஒன்றை நடத்தினர்.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட ரசிகர்களை கடிந்து ரஜினிகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை விடுத்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவும் அறிக்கையில் இருப்பதாவது,
“ஒரு மாட்டுக்கு ஒரு சூடு!
என் அரசியல் நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் சில “கருங்காளிகள்” மன்றத்தின் நற்பெயரை கெடுக்கும் பொருட்டு நான் அரசியலுக்கு வரவேண்டி போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள்.
எல்லாத்துக்கும் போராட்டம் போராட்டம் சொன்னா நாடே சுடுகாடா ஆயிடும் என்று நான் சொன்னதையும் மீறி போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள் என்றால் என் பேச்சுக்கு என்ன மரியாதை?
உங்கள் வீட்டில் சிறுநீரக ஆப்ரேசன் செய்த தந்தையை 70 வயதில் ஓய்வெடுக்க சொல்வீர்களா? அரசியலுக்கு வாடா அயோக்கியப் பயலே என்று சொல்வீர்களா?
குருமூர்த்தி, அமித் ஷா போன்ற மரமண்டைகளுக்கு தான் அறிவில்லை, உங்களுக்கு என்னடா கேடு?
ஜெய்ஹிந்த்!”
சமூக வலைத்தளங்களில் பரவுவதுபோல் இவ்வாறு ஒரு அறிக்கையை ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வந்ததா என்பதை அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
ரசிகர்களை கடிந்து ரஜினிகாந்த் விடுத்த அறிக்கை என்று சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களுக்காக அறிக்கை விடுத்தார் எனும் தகவல் உண்மையானதுதான் என்பதை நம்மால் அறிய முடிந்தது.
ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் விடுத்த அறிக்கையில் இருக்கும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவும் அறிக்கையில் இருக்கும் தகவல்களிலிருந்து மாறுபட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
ரஜினிகாந்தின் உண்மையான அறிக்கையில் இருந்ததாவது,
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு…..
நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.
நான் என் முடிவை கூறிவிட்டேன்.
தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்!
மேற்கண்ட அறிக்கையை காணும்போது, ரஜினிகாந்த அவர்களின் உண்மையான அறிக்கையை எடிட் செய்து வேண்டுமென்றே விஷமிகள் தவறாகப் பரப்புகின்றனர் என்பது நமக்கு தெளிவாகிறது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான அறிக்கையையும், எடிட் செய்த அறிக்கையையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Conclusion
ரஜினிகாந்த் அவர்கள் தனது ரசிகர்களை கடிந்து அறிக்கை விடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் பொய்யானது என்பதையும், அது எடிட் செய்யப்பட்டது என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Facebook Profile: https://www.facebook.com/rajadurai.raja.750983/posts/957777868083521
Facebook Profile: https://www.facebook.com/abukhalidnewfb/posts/219547199751961
Rajinikanth: https://twitter.com/rajinikanth/status/1348504480749297665
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)