Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை.
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெற்ற பணத்தை பணத்தை திரும்ப கேட்டதாலேயே வானதி சீனிவாசன் ஆதரவாளர்களால் அந்த இளைஞர் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல்” என்பதாக இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?
வானதி சீனிவாசன் எம்எல்ஏ அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசனின் எம்எல்ஏ அலுவலகத்திற்குள் நேற்று முன்தினம் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அன்றிரவு அவிநாசி சாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்ற காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் அவர் வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, அவர் அரசுப்பேருந்து ஒன்றின் முன்பாக விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர் காவல்துறையினர்.
இச்சம்பவம் பற்றி வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், “ஓடும் பேருந்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஒருவரை,பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர்,சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு! என பொய் செய்தி பரப்பிய சன் நியூஸ்” என்று இந்த சம்பவம் தொடர்பாக பாஜக கோயமுத்தூர் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவைப் பகிர்ந்துள்ளார் வானதி சீனிவாசன்.
இந்நிலையிலேயே, தினமலர் நாளிதழ், “வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக்கொலை” என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதாக குறிப்பிட்ட புகைப்படம் பரவுகிறது. எனவே, தினமலர் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் தண்டபாணியை இதுதொடர்பாக தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; நாங்கள் அதை வெளியிடவில்லை” என்று தெரிவித்தார்.
அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் வானதி சீனிவாசன் குறித்து, “கோவை பாஜக அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பெரியார் தி.கவினர் மூவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்திருப்பது ஜனநாயகத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பாக உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து.” என்கிற செய்தி மட்டுமே வைரலாகும் நியூஸ்கார்டில் இடம்பெற்றுள்ள தேதியில் பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வானதி சீனிவாசன் எம்எல்ஏ அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Phone Conversation with Dhandapani, Dinamalar Digital, Dated June 14, 2023
YouTube Video From, News Tamil, Dated June 13, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)