Fact Check
ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுகிறாரா?
Claim: காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தைப் போட்டு புத்தகம்..மொழி பெயர்ப்பு ஆர்.என்.ரவி அல்ல ஜி.யு.போப்
Fact: வைரலாகும் புத்தகத்தை எழுதியவர் சிவாய சுப்ரமுனிய சுவாமிகள் ஆவார்.
ஜியு போப் எழுதிய புத்தக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக புகைப்படம் ஒன்றை தினமலர் பகிர்ந்திருந்தது. அந்த அட்டைப்படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

“காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தைப் போட்டு புத்தகம்..மொழி பெயர்ப்பு ஆர்.என்.ரவி அல்ல ஜி.யு.போப்” என்று இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?
Fact Check/Verification
ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக பரவிய செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக, வைரலாகும் திருக்குறள் அட்டைப்படத்தில் ஜியு போப் என்கிற பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன்முடிவில், Kobo என்கிற இணையதளத்தில் ஜியு போப் பெயர் இடம்பெற்றுள்ள இப்புத்தக அட்டைப்படம் இருப்பதை நம்மால் காண முடிந்தது. ஆனால், அட்டைப்படத்தில் ஜியு போப் பெயர் பொருந்தாத வகையில் இடம்பெற்றிருந்தது. எனவே மேலும் குறிப்பிட்ட புகைப்படம் குறித்து ஆராய்ந்தோம்.
அதன்முடிவில், Satguru Sivaya Subramuniyaswami தோற்றுவித்த Himalayan Acadameyயின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள இப்புத்தகத்தில் எழுதியவர் பெயர் “Satguru Sivaya Subramuniyaswami” என்றே இடம் பெற்றிருந்தது.

எனவே, இப்புத்தகத்தின் முழுமையான பதிப்பை நாம் தேடினோம். நம் தேடலின் முடிவில் Himalayan Acadamey இணையதளப்பக்கத்திலேயே இதன் PDF பதிப்பு நமக்குக் கிடைத்தது.
அதன் பதிப்புரை பக்கத்தில் “The cover art and the image of lord murugan opposite the title page are by Thiru. S. Rajam of Chennai.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓவியத்தில் உள்ள ஓவியரின் கையெழுத்தும் ”S Rajam – A Rare Gem Indeed ” என்கிற பெயரில் சுந்தரம் ராஜம் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ள பக்கத்தில் உள்ள ஓவியங்களில் உள்ள கையெழுத்தும் ஒன்றே என்பதையும் நம்மால் அறிய முடிந்தது.

எனவே, ஓவியர் எஸ் ராஜமின் மருமகனும், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பவருமான வி.எஸ்.ரமணாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது குறிப்பிட்ட அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் சுந்தரம் ராஜம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும், HIMALAYAN ACADEMY MUSEUM OF SPIRITUAL ART பக்கத்தில் எஸ்.ராஜம் வரைந்த தேர்ந்தெடுத்த 108 திருக்குறள்களின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராஜம் 1919ஆம் ஆண்டு பிறந்து 2010ஆம் ஆண்டு மறைந்தவர் என்பதும், ஜியு போப் வாழ்ந்த காலகட்டம் அதற்கும் முந்தையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சிவாய சுப்ரமணிய சுவாமிகள் எழுதிய புத்தகத்தில் அவருக்கு முன்பாக திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்தவர்கள் என்கிற Resources பகுதியில்தான் ஜியு போப் பெயர் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளம்பர வீடியோவா இது?
Conclusion
ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக பரவிய செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
HIMALAYAN ACADEMY MUSEUM OF SPIRITUAL ART
Himalayan Acadamey
Facebook Page, ”S Rajam – A Rare Gem Indeed ”
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)