Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பங்களாதேஷில் இந்து மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்களால் தாக்கப்பட்டனர்.
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவத்திற்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. கல்லூரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.
“பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ‘டாக்டர் மெகபூபர் ரஹ்மான் முல்லா’ கல்லூரியில் இஸ்லாமிய மாணவர்கள் இந்து மாணவர்களை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நாளுக்கு நாள் இந்துக்கள் மீது இஸ்லாமியர்களின் தாக்குதல் எல்லை மீறி போய் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பங்களாதேஷில் மதவெறியால் நடந்த கொடூரம் என்று பரவும் ஹத்ராஸ் வீடியோ!
பங்களாதேஷில் இந்து மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்களால் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவில், அச்சம்பவம் டாக்டர் மெகபூபர் ரஹ்மான் முல்லா கல்லூரியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வைரலாகும் வீடியோவிலும் டாக்டர் மெகபூபர் ரஹ்மான் முல்லா கல்லூரி என்று பெயர் பலகை இருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் கபி நஸ்ருல் அரசு கல்லூரி மற்றும் அரசு ஷாஹித் சுராவர்தி கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து முல்லா கல்லூரி மாணவர்களை தாக்கியதாக பிடிநியூஸ்24 எனும் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் எக்கானமிக் டைம்ஸில் இச்சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, முல்லா கல்லூரியை சார்ந்த மாணவர் ஒருவர் டாக்கா நேஷ்னல் மருத்துவக் கல்லூரியில் டெங்கு காரணமாக இறந்துள்ளார். மருத்துவர்களின் அஜாக்கிரதை காரணமாக அம்மாணவர் இறந்ததாக கூறி முல்லா கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேறு சில கல்லூரிகளும் பங்குபெற்றுள்ளன. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறி கபி நஸ்ருல் அரசு கல்லூரி மற்றும் அரசு ஷாஹித் சுராவர்தி கல்லூரி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக இவ்விரு கல்லூரிக்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து இவ்விரு கல்லூரி மாணவர்களும் சேர்ந்து முல்லா கல்லூரி மாணவர்களை தாக்கியதாக தாக்கா டிரிபியூன், தி டெய்லி ஸ்டார், புரொதமாலோ, டெய்லி சன் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் மூன்று கல்லூரிகளுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே வைரலாகும் வீடியோவில் காணப்படும் வன்முறை சம்பவம் ஏற்பட்டுள்ளது எனவும் இந்த வன்முறைக்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்மில்லை எனவும் அறிய முடிகின்றது.
Also Read: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசமா?
பங்களாதேஷில் இந்து மாணவர்கள் இஸ்லாமிய மாணவர்களால் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். மூன்று கல்லூரிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்கு மதச்சாயம் பூசி இத்தவறான தகவல் பரப்பப்படுகின்றது. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from BDnews24, Dated November 24, 2024
Report from Economic Times, Dated November 26, 2024
Report from Dhaka Tribune, Dated November 25, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Ramkumar Kaliamurthy
October 8, 2025
Ramkumar Kaliamurthy
August 8, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 4, 2025