Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது.
தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வு முடிவுகளை சட்டப்பேரவையில் கடந்த வியாழனன்று ( செப்டம்பர் 9) வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் விவரங்களை பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வாசித்தார்.
கீழடி என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துள்ளது. அதே உணர்வைத் தாங்கி தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை, கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, மயிலாடும்பாறை, கொடுமணல், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் கிடைத்த அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் செலவில் பொருநை அருங்காட்சியகம் உருவாக்கப்படும்.
தமிழ் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதி பெற்று தொல்லியல் ஆய்வுகளை நடத்தும்.
இதன் முதற்கட்டமாக தற்போது கேரளாவில் பட்டணம் என்ற பெயரில் உள்ள முசிறி, ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காடு, ஒரிசாவில் உள்ள பாலூர் ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடத்தப்படும்.
அன்றைய ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய எகிப்தின் குசிர் அல் காதிம், பெர்னிகா, ஓமன் நாட்டின் கோர்ரோரி ஆகிய இடங்களில் தமிழ்நாட்டோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதிசெய்யும் தமிழி எழுத்து பொரிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில் அந்நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ராஜேந்திரச் சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் தொல்லியல் வல்லுநர்களின் உதவியோடு, தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் நிறுவுவதே தமிழ்நாடு அரசின் கடமை
என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Also Read: மாணவர் தனுஷின் உறவினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக வதந்தி!
இந்நிலையில் “இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது. சமஸ்கிருதமே இந்தியாவின் மூத்த மொழி. அதன் வரலாறே இந்தியாவின் வரலாறு” என்று பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக தினமலரின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இவ்வாறு நியூஸ்கார்டை தினமலர் வெளியிட்டுள்ளதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
உத்திரப் பிரதேச சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் உ.பி., உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் மீண்டும் பா.ஜக ஆட்சி அமைக்கும் என்று நட்டா பேசினார். இத்தகவலை தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியில் வெளியிட்டுள்ள நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
Also Read: மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் என்றாரா ஹெச்.ராஜா?
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
இத்தகவலை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 14, 2025
Ramkumar Kaliamurthy
April 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025