Fact Check
ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக பரவும் பழைய வீடியோ!
Claim: ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக பரவும் வீடியோ!
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ ஏப்ரல் 29 ஆம் தேதி பிரதமர் மோடி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும்.
பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை (18/05/2024) ஹரியானா மாநிலம் அம்பலாவில் நடந்த பொதுகூட்டம் ஒன்றில் கலந்து பேசினார். இக்கூட்டத்தில் மோடி காலி இருக்கைகளுடன் பேசிக்கொண்டிருந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?
Fact Check/Verification
ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் @Anti_CAA_23 என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் “மோடி குப்பை பேச்சை கேட்க மக்கள் தயாராக இல்லை. புனேவில் மோடி கலந்துக்கொண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டமின்றி கிடந்த காலி சேர்கள்” என்று குறிப்பிட்டு இதே வீடியோவை மே 01, 2024 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அதேபோல் @ASHOK_TN24 என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்திலும் மே 02, 2024 அன்று இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடியதில் மோடி கலந்துக்கொண்ட புனே பொதுகூட்டத்தின் முழு வீடியோ மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 29, 2024 அன்று லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் நீல நிற மேலுடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து மோடி அவ்வீடியோவில் பேசுவதை காண முடிந்தது.

மேலும் இவ்வீடியோவின் 54:20 நேரத்தில் பிரதமர் மோடி பேசும் வார்த்தைகள் வைரலாகும் வீடியோவில் மோடி பேசும் வார்த்தைகளுடன் ஒற்றுப்போவதை நம்மால் காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ சென்ற மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகின்றது. ஆகவே இவ்வீடியோவுக்கும் ஹரியானா பொதுக்கூட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகின்றது.
மேலும் மோடி யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோவில் 59ஆவது நிமிடத்தில், அதாவது வைரலாகும் வீடியோ எடுக்கப்பட்டதாக கருதப்படும் நேரத்திற்கு (54:20) பிறகு மோடி பேச்சை அதிக மக்கள் உட்கார்ந்து கேட்பதாக இருப்பதை காண முடிகின்றது. இதுத்தவிர்த்து வீடியோவின் 6:52, 21:48, 29:40, 39:37 என பல நேரங்களில் பெரும் கூட்டம் இருப்பதை காண முடிகின்றது. இதனடிப்படையில் பார்க்கையில் மோடி கூட்டத்திற்கு கூட்டம் வரவில்லை எனும் வாதம் ஏற்புடையதாக இல்லை.
Also Read: கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்ததா?
Conclusion
ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது சென்ற மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
X Post from the user, @CAshivrajshetty, Dated May 01, 2024
X Post from the user, @ASHOK_TN24, Dated May 02, 2024
Youtube video from Modi’s official channel, Dated April 29, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)