சசிகலா, பரப்பன அக்ரஹார சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று ஓபிஎஸ் ட்விட் வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Fact Check/Verification:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா நடராஜன், சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். தற்போது, அதிமுக கட்சி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களின் கைகளில் உள்ளது.
சசிகலா அடுத்த வாரம் சிறையில் இருந்து வெளியாகவுள்ள நிலையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக விக்டேரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், கடுமையான நிமோனியா இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில், தமிழக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், சசிகலா விரைவில் குணமடைந்து வந்து அஇஅதிமுக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி பாஜகவிடமிருந்து மீட்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தனமைக் குறித்து அறிய, இப்புகைப்படச் செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
சசிகலாவை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் ட்விட் போட்டதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய முதலில் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை ஆராய்ந்து பார்த்தோம்.
@OfficeOfOPS என்பதுதான் துணை முதல்வரின் அதிகாரப்பூர்வ பக்கம் ஆகும். அதில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கான வாழ்த்துச் செய்தியே ஜனவரி 21 அன்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், பரவும் ட்விட் புகைப்படத்தில் தமிழ் வார்த்தைகள் எல்லாமே பெரும்பாலும் ஒற்றுப் பிழைகளுடனும், இலக்கணப் பிழைகளுடனும் காணப்படுகின்றன.
குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இருக்கும் @officeof_ops என்கிற ட்விட்டர் முகவரி, விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக முடக்கப்பட்டதும் நம்மால் கண்டறிய முடிந்தது.

கூடவே, வைரலாகும் ட்விட் புகைப்படத்தையும், ஓபிஎஸ் அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தின் ட்விட் ஒன்றினையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதன்மூலமாக, குறிப்பிட்ட அந்த ட்விட்டர் பக்கமே தவறாக உருவாக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது,
Conclusion:
எனவே, சசிகலாவை வரவேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட் வெளியிட்டதாகப் பரவிய புகைப்படம் போலியானதாகும் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
OPS Twitter page: https://twitter.com/OfficeOfOPS
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)