Fact Check
Fact Check: சாவர்க்கர் பேரனின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சாவர்க்கர் பற்றிய ட்வீட்களை டெலிட் செய்தாரா ராகுல் காந்தி?
Claim
சாவர்க்கர் குறித்த ட்விட்டர் பதிவுகளை அழித்த ராகுல் காந்தி.
Fact
வைரலாகும் தகவல் போலியானதாகும். அவர் சமீபத்தில் எந்த ட்விட்டர் பதிவையும் அழித்திருக்கவில்லை
சாவர்க்கர் பற்றிய ட்விட்டர் பதிவுகள் அனைத்தையும் ராகுல் காந்தி அழித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”சாவர்க்கரின் பேரன் வழக்கு போடுவதாகக் கூறியவுடன் அவர் குறித்த ட்வீட்களை அழித்துவிட்டார் ராகுல் காந்தி” என்பதாக இந்த தகவல் பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Factcheck / Verification
சாவர்க்கர் பற்றிய ட்விட்டர் பதிவுகள் அனைத்தையும் அவரது பேரனின் வழக்கு எச்சரிக்கையைத் தொடர்ந்து ராகுல் காந்தி அழித்ததாக பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட சமூகத்தினை அவதூறாகப் பேசியதாக வயநாடு மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ஊடகங்களைச் சந்தித்த ராகுல் காந்தி கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் அவர் பேசியதற்கு பாஜக மன்னிப்பு கேட்கச் சொல்வது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்தபோது, ”நான் சாவர்க்கர் அல்ல; மன்னிப்பு கேட்கமாட்டேன்” என்று கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்தைத் தொடர்ந்து, ”சாவர்க்கரை குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது புகார் பதிவு செய்வேன்” என்று தெரிவித்துள்ளார் சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர்.
இந்நிலையில், ரஞ்சித் சாவர்க்கரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ராகுல் காந்தி அவர் குறித்து பதிவிட்ட ட்வீட்களை அழித்துவிட்டதாகப் பரவிய நிலையில் கடந்த சில நாட்களில் ராகுல் காந்தி சாவர்க்கரைப் பற்றிய ட்வீட்களை அழித்திருக்கிறாரா என்று Social Blade மூலமாக ஆராய்ந்தோம். ஆனால், அவர் எந்த ட்விட்டர் பதிவையும் கடந்த சில நாட்களில் அழித்திருக்கவில்லை. குறிப்பாக மார்ச் 24 முதல் மார்ச் 28 வரையில் அவருடைய ட்விட்டர் பதிவுகள் எதுவும் நீக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், கடந்த நாட்களில் அவர் சாவர்க்கர் குறித்து எந்த பதிவையும் இட்டிருக்கவில்லை என்பதும் அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆராய்ந்தபோது உறுதியானது. சாவர்க்கர் குறித்து வாய்மொழியாகவே பலதடவைகள் ராகுல் காந்தி கருத்துக்களை பதிவிட்டுள்ளார் என்பதும், பதிவாக இட்டிருக்கவில்லை என்பதும் தெரிந்தது.

Google Cache மூலமாகத் தேடியபோது கடந்த காலத்தில் அவர் சாவர்க்கர் பற்றி பதிவிட்டு நீக்கியதாக சேகரம் செய்யப்பட்ட பதிவு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. மேலும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட சாவர்க்கர் குறித்த பதிவும் நீக்கப்படாமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion
சாவர்க்கர் பற்றிய ட்விட்டர் பதிவுகள் அனைத்தையும் அவரது பேரனின் வழக்கு எச்சரிக்கையைத் தொடர்ந்து ராகுல் காந்தி அழித்ததாக பரவும் தகவல் தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Post From, INC India, Dated March 25, 2023
YouTube Post From, Moneycontrol
SocialBlade
Twitter Post From, ANI, Dated March 28, 2023
Transcontinentaltimes
News Report From, The Economic Times, Dated March 27, 2016
Twitter Post From, INC India, Dated March 23, 2016
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)