Fact Check
வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?
Claim: வேலை இல்லாமல் facebook instagram இல் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் மாதம் ₹8500.
Fact: வைரலாகும் வீடியோவில் ராகுல் காந்தி பயிற்சியுடன் கூடிய வேலை பற்றிய தேர்தல் அறிக்கை வாக்குறுதியைப் பற்றியே பேசியிருந்தார்.
வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“வேலை இல்லாமல் facebook instagram இல் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் மாதம் ₹8500. இது தான் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றும் வழியாம் கோமாளிக்கு.. பாத்துகோங்க மக்களே” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
Fact Check/Verification
வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ராகுல் காந்தி பேசியிருந்த முழுமையான உரையின் வீடியோ நமக்குக் கிடைத்தது.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதியன்று ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூபில் வெளியாகியுள்ள இந்த வீடியோ, பீகார் பாகல்பூரில் அவர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.
அந்த வீடியோவில், 9.30 மணித்துளிகளில், “நரேந்திர மோடி இந்தியாவை வேலையில்லா திண்டாட்டத்தின் மையமாக மாற்றியுள்ளார். இளைஞர்களிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றே கூறுவார்கள். ஒரு நாளைக்கு அவர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் 6 முதல் 7 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள். ஏன்? ஏனென்றால் மோடிஜி நாடு முழுமைக்கும் வேலையின்மையை பரப்பியுள்ளார்.” என்று பேசியுள்ளார்.
குறிப்பிட்ட வீடியோவில் அவர், “முதல் வேலை உரிமை என்றால் இந்தியாவில் இருக்கும் அனைத்து டிப்ளமோ பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் அனைவரும் ஒரு வருட வேலைக்கான பயிற்சியுடன் வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் அதாவது மாதம் 8500 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் பெறுவார்கள். பயிற்சிக்காலத்தின் முதல் வருடத்தில் நன்கு செயலாற்றினால் அவர்களுக்கு நிரந்தரமான பணியிடங்கள் வழங்கப்படும். இந்த பயிற்சித்திட்டமானது அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் ஏற்படுத்தப்படும். இந்த திட்டம் மூலமாக இளைஞர்களுக்கு ஒரு திறமையான வேலை சூழ்நிலையை ஏற்படுத்த முடியும். இதன்மூலம், தற்போது சாலைகளில் திரிந்து கொண்டும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் நேரம் செலவிடும் இளைஞர்களுக்கும் வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் அதாவது மாதம் ரூபாய் 8500 அரசால் அவர்கள் வங்கி கணக்கில் கிடைக்கும்” என்று பேசியிருந்தார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு பற்றி ராகுல் காந்தி பேசிய வீடியோவில் அவர் சமூக வலைத்தளம் பற்றி தெரிவித்தது மட்டும் தவறான நோக்கில் கட் செய்யப்பட்டு பரவி வருகிறது என்பது தெளிவாகிறது.
Conclusion
வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
YouTube Video From, Rahul Gandhi, Dated April 20, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)