காலிஸ்தான் ஜிந்தாபாத் என விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் கோஷமிட்டதாக வீடியோவுடன் செய்தி ஒன்று வைரலாகிறது.

Fact Check/Verification:
புதிய வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வருகின்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் போராட்டக் களத்தில் அவர்களைச் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்திருந்தார்.
டெல்லி-ஹரியான எல்லையில் அவர்களுக்கு ஆதரவாக போராட்டக்களத்திலும் கலந்து கொண்டார்.
இச்சூழ்நிலையில், அப்போராட்டக்களத்தில் தொல்.திருமாவளவன் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டதாகவும், அவ்வாறு கோஷமிட்ட திருமாவளவன் எப்போது கைது செய்யப்படுவார் எனவும் சமூக வலைத்தளங்களில் வீடியோவுடன் கூடிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
Archived Link: https://archive.vn/ZExSV
பூர்ண சந்திரன், கமலி நாதன் என்கிற ஐடிக்கள் உள்ளிட்ட பலரும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் வலைத்தளப்பக்கங்களில் இந்த வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
Archived Link: https://archive.vn/SUbyr
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
சமூக வலைத்தளங்களில் திருமாவளவன் குறித்துப் பரவும் அச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, குறிப்பிட்ட அந்த வீடியோவை திருமாவளவன் அவர்கள் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளாரா என்று பார்த்தோம்.
அந்த வீடியோவை, திருமாவளவன் மட்டுமின்றி அவருடன் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி ரவிக்குமாரும் ஷேர் செய்துள்ளார்.
அவர், “போராட்ட களத்தில் சிறுத்தைகள்…டெல்லி- ஹரியானா எல்லையில் டிகிரி பகுதியில் லட்சக்க்கணக்கில் கூடி போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை தலைவர் எழுச்சித் தமிழரும் நானும் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அந்தக் காட்சிகளை இந்த வீடியோவில் பாருங்கள்” என்று அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த வீடியோவின் ஆடியோவை இணையத்தள உதவியுடன் தெளிவாக்கிக் கேட்டபோது முதலில் ‘வெல்வோம் வெல்வோம்’ அதாவது ஜீதேங்கே ஜீதேங்கே என்று முழக்கமிடுகின்றனர் விவசாயிகள். தொடர்ந்து “kisan ek tha zindabad” கிசான் ஏக்தா ஜிந்தாபாத் என்று விவசாயிகளின் ஒற்றுமை ஓங்குக என்று கோஷமிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட அந்த வீடியோவினை, நியூஸ்செக்கர் இணையதளத்தின் பஞ்சாபி நண்பர்கள் உதவியுடன் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை அறிந்து கொண்டோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலரும் இதனை உறுதிப்படுத்தினர்.
Conclusion:
எனவே, தொல்.திருமாவளவன் அவர்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்; உண்மையில் அவர்கள் ‘கிசான் ஏக்தா ஜிந்தாபாத்’ என்றே கோஷமிட்டனர் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விவரித்துள்ளோம்.
ஆகவே, வாசகர்கள் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Result: False
Our Sources:
Thol.Thirumavalavan: https://twitter.com/thirumaofficial
Dr.Ravikumar M.P: https://twitter.com/WriterRavikumar/status/1359748619407040516?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)