Fact Check
குஜராத்தில் எடுக்கப்பட்ட படமா இது?

குஜராத்தில் மருத்துவ வசதி இல்லாமல் ஆக்சிஜன் சிலிண்டருடன் மூதாட்டி ஒருவர் வெட்ட வெளியில் உட்கார்ந்திருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நாடு முழுவதும் கொரானா இரண்டாம் அலையின் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அதிலும் குஜராத், உத்திரப் பிரதேசம், டெல்லி போன்ற வட மாநிலங்களில் இந்த பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்து வருகின்றது.
கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவைகள் போதுமான அளவு இல்லாததால் இம்மாநிலங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிகழ்வுகள் காரணமாக மோடி அரசையும், அவரது குஜராத் மாடலையும் பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். கூடவே குஜராத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பல புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றது.
இவற்றில் மூதாட்டி ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வீதியில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் குஜராத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பகிர்ந்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/sSX9c

Archive Link: https://archive.ph/rrV60

Archive Link: https://archive.ph/JShoE
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
குஜராத்தில் ஆக்சிஜன் சிலிண்டருடன் மூதாட்டி ஒருவர் வெட்ட வெளியில் உட்கார்ந்திருப்பதாக கூறி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு ஆய்வு செய்ததில் இப்புகைப்படம் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது எனும் உண்மையை நமக்கு அறிய முடிந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலத்தை சார்ந்த ஆக்ராவில், மருத்துவமனை வளாகம் ஒன்றில் மூதாட்டி ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆம்புலன்ஸிற்காக நெடு நேரமாக காத்திருந்தார். இந்நிகழ்வு குறித்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலானது. அப்போது எடுக்கப்பட்ட படமே தற்போது வைரலாகி வருகின்றது.
இதுக்குறித்த செய்தி ANI உள்ளிட்ட ஊடகங்களில் அப்போது வெளிவந்திருந்தது.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மூதாட்டி ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் உட்கார்ந்திருக்கும் படம் குஜராத்தில் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
Conclusion
குஜராத்தில் மருத்துவ வசதி இல்லாமல் ஆக்சிஜன் சிலிண்டருடன் மூதாட்டி ஒருவர் வெட்ட வெளியில் உட்கார்ந்திருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் படம் ஆக்ராவில் எடுக்கப்பட்டது என்பதையும், அதுவும் அப்படம் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழையப் படம் என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
ANI: https://www.youtube.com/watch?v=xrdRKSMkAVM
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)