Fact Check
திமுக ஆட்சியில் இளைஞரை போக்குவரத்து காவலர்கள் தாக்கினரா?
Claim
திமுக ஆட்சியில் போக்குவரத்து காவலர்கள் இளைஞரை மின்கம்பத்தில் கட்டிப்போட்டு தாக்கினர்.
Fact
இச்சம்பவம் 2018 ஆம் ஆண்டில் அஇஅதிமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது நடந்ததாகும். திமுக ஆட்சிக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை.
“தாயின் கண் முன் மகனை கட்டிவைத்து அடிக்கும் போக்குவரத்துக்கு காவல்துறை அரக்கர்கள்!” என்று குறிப்பிட்டு ஆளும் திமுக அரசை விமர்சித்து வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் இளைஞர் ஒருவரை மின்கம்பத்தில் கட்டிப்போட்டவாறு போக்குவரத்து காவலர் ஒருவர் பின்புறமாய் பிடித்துக்கொண்டிருப்பதையும், அந்த இளைஞர் மற்றொரு போக்குவரத்து காவலரின் சட்டையை பிடித்துக்கொண்டிருக்க அக்காவலர் அதிலிருந்து விடுபட முயற்சிப்பதையும் காண முடிந்தது.


Also Read: விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரவும் எடிட் படம்!
Fact Check/Verification
திமுக ஆட்சியில் போக்குவரத்து காவலர்கள் இளைஞரை மின்கம்பத்தில் கட்டிப்போட்டு தாக்கியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் திமுக துணை பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி ஏப்ரல் 3, 2018 அன்று வைரலாகும் இதே வீடியோவை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து காவல்துறையை கண்டித்து பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. இச்சம்பவம் சென்னை தி.நகரில் நடந்தது என்றும், அந்த இளைஞரின் பெயர் பிரகாஷ் என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் புதிய தலைமுறை ஊட்கத்தின் யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 3, 2018 அன்று இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
பிரகாஷ் என்கிற இளைஞர் ஹெல்மெட் இல்லாமல் தாய் மற்றும் சகோதரியுடன் மூன்று பேராக இரு சக்கர வாகனத்தில் வந்ததாகவும், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்தபோது அவர்களுடன் வாக்குவாதம் செய்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவலர்களின் சட்டையை பிடித்துக்கொண்டிருந்த பிரகாஷின் கையை விடுவிக்க முயற்சி செய்தோமேயொழிய அவரை தாக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அந்த இளைஞர் போலீஸை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், மாலை மலர், நியூஸ் 7 தமிழ், சன் நியூஸ் உள்ளிட்ட ஊடங்களிலும் இச்சம்பவம் 2018 ஏப்ரலில் நடந்ததாக செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் நடக்கவில்லை; 2018 ஆம் ஆண்டில் நடந்தது என்பது உறுதியாகின்றது.
2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது அஇஅதிமுகவாகும்; திமுக அல்ல. ஆகவே திமுகவுக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை.
Also Read: மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று கூறினாரா தவெக தலைவர் விஜய்?
Conclusion
திமுக ஆட்சியில் போக்குவரத்து காவலர்கள் இளைஞரை மின்கம்பத்தில் கட்டிப்போட்டு தாக்கியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். 2018 ஆம் ஆண்டில் அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவமே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post by Kanimozhi, Deputy General Secretary, DMK, dated April 3, 2018
Report by Puthiya Thalaimurai, dated April 3, 2018
Report by Indian Express Tamil, dated April 3, 2018
Report by Sun News, dated April 3, 2018
Report by Maamalai Malar, dated April 3, 2018
Report by News 7 Tamil, dated April 3, 2018